விஜய் டிவியில், பக்திக் காவியமான ‘தமிழ் கடவுள் முருகன்’, தொடர் ரசிகர்களின் அமோகமான வரவேற்பைப் பெற்ற ஒரு தொடராக விளங்கி வருகிறது.
இந்தத் தொடர் முருகப் பெருமானின் திருக்கதையைச் சுற்றி மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. தமிழின் பெருங்காவியமான கந்தபுராணத்தை தழுவி எடுக்கப்படுவதுதான் இந்த ‘தமிழ் கடவுள் முருகன்’.
இத் தொடரில் முருகனின் பிறப்பு முதல் அவருடைய சூரசம்ஹாரம் வரை அனைத்தும் இடம் பெறுகிறது.
தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கப்படும் ஒரு தொடரான இதில், விசுவல் எபக்ட்ஸ் போன்ற தொழில்நுட்பத்தின் உதவியோடு நேயர்களின் கண்களுக்கு ஒரு பிரமாண்டமான விருந்தாக அமைந்து வருகிறது.
தற்போது இத் தொடரில், அரக்கர்களின் ஒருவனான மகிஷாசுரன் தேவர்களை சிறை பிடிக்கிறான், அவர்களை மீட்க முருகப் பெருமானும் போர் புரிய கிளம்புகிறார். மகிஷாசுரனை எந்த ஒரு சக்தியாலும் வீழ்த்த முடியாமல் போகிறது. முருகப் பெருமானின் தேவி கவசமும் தோற்கிறது. இதைக் கண்டு பார்வதிதேவி முதன் முறையாக போர்க் களத்தில் அவதாரம் எடுக்க களம் இறங்குகிறார். அந்த அற்புதக் காட்சி இனி வரும் நாட்களில் இடம் பெற உள்ளது.
‘மாப்பிள்ளை’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்திரா பிரியதர்ஷினி பார்வதி தேவியாக நடிக்கிறார். முருகனாக பேபி அனிருதா நடிக்கிறார். தமிழ் தொலைக்காட்சி நடிகர் சசிந்தர் புஷ்பலிங்கம் சிவாபெருமானாக நடிக்கிறார்.
தமிழ் வழி வந்த, அறுபடை வீடு கொண்ட திருமுருகனின் இந்த பிரம்மாண்ட தொடரை விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு கண்டு ரசிக்கலாம்.