சூர்யா – சுதா கொங்காரா இருவரும் இணைந்து பணிபுரிய இருந்த படம் டிராப்பாகி விட்டது.
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா, துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘புறநானூறு’. 2டி நிறுவனம் தயாரிக்க இருந்த இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ஒப்பந்தமாகி இருந்தார். இதற்கான பாடல் பதிவு அனைத்தும் முடிவுற்றது.
இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. இதற்காக மதுரையில் அரங்கம் அமைக்கும் பணிகள் அனைத்தும் நடைபெற்று வந்தது. இதனிடையே யாரும் எதிர்பாராத வண்ணம், இந்தப் படம் இப்போதைக்கு இல்லை, படப்பிடிப்புக்கு சில மாதங்கள் ஆகும் என்று சூர்யா மற்றும் சுதா கொங்காரா இருவரும் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ‘புறநானூறு’ தாமதத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. இது தொடர்பாக விசாரித்த போது, இந்தப் படத்தினை டிராப் செய்துவிட்டதாக கூறுகிறார்கள். சுதா கொங்காரா கூறிய இறுதிவடிவத்தின் கதை சூர்யாவுக்கு திருப்தியாக இல்லை என்கிறார்கள். வேறு கதையில் இணையலாம், தயார் செய்துவிட்டு வாருங்கள் என்று அனுப்பிவிட்டாராம் சூர்யா.
சூர்யா படம் இல்லை என்பது முடிவாகிவிட்டதால், பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் முன்னணி நடிகர்கள் பலரும் சுதா கொங்காராவுக்கு படம் பண்ணலாமா என்று தொலைபேசியில் பேசி வருகிறார்களாம்.