சுதா கொங்காராவின் கதையில் நடிக்க முன்னணி நாயகர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
’சூரரைப் போற்று’ படத்தினைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் ‘புறநானூறு’ படத்தினை இயக்க ஒப்பந்தமானார் சுதா கொங்காரா. 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா உள்ளிட்ட பலர் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்தப் படம் டிராப் பண்ணப்பட்டது.
தற்போது ‘புறநானூறு’ கதையினை வேறொரு நாயகனை வைத்து இயக்கலாம் என்று முடிவு செய்துவிட்டார் சுதா கொங்காரா. இதற்காக சில முன்னணி நாயகர்களை அணுகியிருக்கிறார். அவர்களோ கதை அருமையாக இருந்தாலும், படப்பிடிப்புக்கு ஆகும் பொருட்செலவினை பார்த்து தயக்கம் காட்டுகிறார்கள். ஏனென்றால், படக்குழுவினர் சம்பளம் இல்லாமல் படப்பிடிப்புக்கு மட்டும் சுமார் 80 கோடி வரை ஆகும் என்கிறாராம் சுதா கொங்காரா.
இவ்வளவு பெரிய பட்ஜெட் உடன், நடிகர்களின் சம்பளமும் இணைந்தால் சுமார் 200 கோடி வரை படத்தின் பட்ஜெட் இருக்கும் என்று கருதுகிறார்கள். தற்போதுள்ள சூழலில் இந்த முதலீட்டை மீண்டும் எடுக்க முடியுமா என்று கருதுகிறார்கள். இதனால் இந்தக் கதையினை ஓரமாக வைத்துவிட்டு வேறொரு கதையில் பணிபுரியவும் முடிவு செய்திருக்கிறார் சுதா கொங்காரா.