‘அயலான் 2’ கண்டிப்பாக உருவாகும் என்று சிவகார்த்திகேயன் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘அயலான்’.
கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
’அயலான்’ படம் வெளியான அன்று வசூல் குறைவாக இருந்தாலும், அடுத்டுத்த நாட்களில் வசூல் அதிகமாகிவிட்டது. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளன.
இந்தப் படத்தினை சிவகார்த்திகேயன், இயக்குநர் ரவிக்குமார் உள்ளிட்டோர் திருப்பூரில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் கண்டுகளித்தனர். அப்போது ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மத்தியில் சிவகார்த்திகேயன் பேசியதாவது:
“அனைத்து தரப்பு மக்களையும் திரையரங்கில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ’அயலான்’ படத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுத்ததிற்கு தமிழக மக்களுக்கு மிகப்பெரிய நன்றி.
சில காரணங்களால் தாமதமாக வந்த படமாக இருந்தாலும், அதை எல்லாம் பொருட்படுத்தாமல் எங்களுடைய உழைப்புக்கு பெரிய அங்கீகாரம் கொடுத்த மக்களுக்கு நன்றி.
’அயலான் 2’ கண்டிப்பாக வெளியாகும். இதை படத்தின் விளம்பரத்திற்காக சொல்லவில்லை. தற்போது மக்களுக்கு ஏலியன் எந்தளவுக்கு பிடித்துள்ளது என்பது தெரிந்துவிட்டது.
இந்த படத்தில் இருக்கும் சின்ன சின்ன குறைகளை அடுத்த படத்தில் சரி செய்துக் கொள்வோம்”
இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.