‘இந்தியன் 2’, ‘இந்தியன் 3’, ‘கேம் சேஞ்சர்’ ஆகிய 3 படங்களிலுமே பரபரப்பாக பணிபுரிந்து வருகிறார் இயக்குநர் ஷங்கர்.
கமல் – ஷங்கர் இணைப்பில் தொடங்கப்பட்ட படம் ‘இந்தியன் 2’. பல்வேறு பிரச்சினைகளை கடந்து தற்போது முழுபடப்பிடிப்பும் முடிந்துவிட்டது. முதலில் ‘இந்தியன் 2’ மட்டுமே தொடங்கப்பட்டது.
ஆனால், படத்தின் நீளம் மற்றும் கதையின் போக்கு ஆகியவற்றை முன்வைத்து ‘இந்தியன் 3’ படத்தின் படப்பிடிப்பையும் இதோடு சேர்த்து கவனித்து வருகிறார் இயக்குநர் ஷங்கர்.
முதலில் எழுதிய கதையை வைத்து படமாக்கிய காட்சிகள் அனைத்துமே ‘இந்தியன் 3’ என்று முடிவு செய்துள்ளார் இயக்குநர் ஷங்கர். தற்போது படமாக்கிய காட்சிகள் அனைத்துமே ‘இந்தியன் 2’ படத்துக்காக தான்.
இதில் ‘இந்தியன் 2’ படத்தின் எடிட்டிங் பணிகளை முடித்து இறுதிக்கட்டப் பணிகளைத் தொடங்கிவிட்டது படக்குழு. கிராபிக்ஸ், பின்னணி இசை உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
’இந்தியன் 3’ படத்தின் எடிட்டிங் பணிகளை பின்பு பார்த்துக் கொள்ளலாம்.
அதனை முடிக்கும் முன்பு, காட்சிகள் ஏதேனும் தேவை என்றால் பின்பு படமாக்கிக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள்.
‘இந்தியன் 2’ மற்றும் ‘இந்தியன் 3’ உள்ளிட்ட படங்களின் தாமதத்தினால், ஷங்கர் தொடங்கிய படம் ‘கேம் சேஞ்சர்’. ராம் சரண் நடித்து வரும் இந்தப் படம் பெரும் பொருட்செலவில் தயாராகி வருகிறது.
இதன் படப்பிடிப்பும் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. தற்போது பிப்ரவரிக்குள் தனது காட்சிகளை முடித்துவிடுமாறு ராம்சரண் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கேம் சேஞ்சர்’ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் மார்ச் மாதத்திற்குள் முடித்துவிட திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.
அனைத்து பணிகளும் முடிவடையும் தருவாயை பொறுத்து, படத்தின் வெளியீட்டை முடிவு செய்ய உள்ளார் தில் ராஜு. இப்போதைக்கு அக்டோபர் மாத வெளியீட்டிற்கு திட்டமிட்டு இருக்கிறார்.
ஒரே நேரத்தில் ‘இந்தியன் 2’, ‘இந்தியன் 3’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ என மூன்று படங்களிலும் இடைவிடாது பணிபுரிந்து வருகிறார் ஷங்கர்.
இதற்காக தன்னிடம் முன்பு பணிபுரிந்த உதவி இயக்குநர்களான வசந்த பாலன், அறிவழகன் உள்ளிட்ட பலரது உதவிகளையும் பெற்று இருக்கிறார்.