விரைவில் ‘சங்கமித்ரா’ தொடங்கப்படும் என்று இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் அறிவிக்கப்பட்ட படம் ‘சங்கமித்ரா’. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 2018-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால், கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகளோடு நிறுத்தப்பட்டது.
‘சங்கமித்ரா’ ஒரு வரலாற்று படம் என்பதால் பெரும் முதலீடு தேவைப்பட்டது. மேலும், இதற்காக அரங்குகள், உடைகள் உள்ளிட்ட அனைத்துமே தயார் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டது. இதனால் அடுத்டுத்த படங்களில் மும்முரமாகி விட்டார் சுந்தர்.சி
தற்போது ‘அரண்மனை 4’ படத்தினை இயக்கியுள்ளார் சுந்தர்.சி. இதனை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் ‘சங்கமித்ரா’ தொடர்பாக பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
”’சங்கமித்ரா’ படம் விரைவில் தொடங்கவுள்ளோம். இந்த ஆண்டு முடிவிற்குள் ஒரு நல்ல விஷயம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்தப் படத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே, அதன் மதிப்பு என்ன என்பது தெரியும்.
‘சங்கமித்ரா’ படத்தில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர், நடிகர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், எழுத்தாளர்கள் உள்ளிட்ட அனைவருமே கடும் உழைப்பினைப் போட்டுள்ளோம். அனைவருமே பெரிய இடத்தில் இருந்தாலுமே, இந்தப் படம் எப்போது தொடங்குவோம் என்ற ஆர்வத்தில் இருக்கிறார்கள். இந்தாண்டு இறுதியில் மீண்டும் தொடங்குவோம் என்ற நம்பிக்கை உள்ளது”
இவ்வாறு சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.