‘லால் சிங் சத்தா’ படத்தில் தனது நடிப்பில் தவறு இருந்ததாக் ஆமிர்கான் தெரிவித்துள்ளார்.
உலகளவில் பிரபலமான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ ஹாலிவுட் படத்தின் இந்தி ரீமேக் தான் ‘லால் சிங் சத்தா’. இதனை அத்வைத் சந்தன் இயக்கியிருந்தார். ஆமிர்கான், கரீனா கபூர் கான், நாக சைத்தன்யா, மோனா சிங் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தினை ஆமிர்கான், கிரன் ராவ், ஜோதி தேஷ்பாண்டே மற்றும் அஜித் உள்ளிட்டோர் தயாரித்திருந்தனர்.
மாபெரும் எதிர்பார்ப்பு இடையே வெளியான இந்தப் படம் படுதோல்வியை தழுவியது. இதற்கு பிறகு ஆமிர்கான் எந்தவொரு படத்திலும் நடிக்கவில்லை. அடுத்த படத்திற்கான கதை விவாதப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் ‘லால் சிங் சத்தா’ தோல்வி குறித்து ஆமிர்கான் கூறியிருப்பதாவது:
“’லால் சிங் சத்தா’ படத்தில் ஒட்டுமொத்த படக்குழுவினருமே கடுமையாக உழைத்தோம். ஆனால், படம் ஏனோ மக்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் படக்குழுவினர் அனைவரும் கடும் ஏமாற்றமடைந்தார்கள். அதில் நான் ஒரே மாதிரி நடிக்கவில்லை. படம் முழுவதும் வெவ்வேறு மாதிரி இருக்கும். ஒரு நடிகனாக அது என்னுடைய குறைபாடு. அதனை எனது அடுத்த படத்தில் சரி செய்ய முயற்சிக்கப் போகிறேன். என் திரையுலக வாழ்வில் வெற்றிப் படங்களை விட தோல்விகள்தான் அதிகம் கற்றுக் கொடுத்துள்ளன”
இவ்வாறு ஆமிர்கான் தெரிவித்துள்ளார்.