வழக்கமான ரஜினி படம் கிடையாது ‘வேட்டையன்’ என்று ராணா தெரிவித்துள்ளார்.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வேட்டையன்’. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. சென்னை, ஹைதராபாத், திருநெல்வேலி, தூத்துக்குடி, மும்பை என பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
முதன்முறையாக ‘வேட்டையன்’ கதைகளம் குறித்து பேசியிருக்கிறார் ராணா. இதில் அவர் வில்லனாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ‘வேட்டையன்’ குறித்து ராணா கூறியிருப்பதாவது:
“இன்னும் எனக்கு 10 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. ‘வேட்டையன்’ வழக்கமான ரஜினி படம் கிடையாது. ஆனால், இப்படியான ஒரு கதைகளத்தில் ரஜினி சார் நடிப்பது அற்புதமான விஷயம். ரஜினி சார், அமிதாப் சார், ஃபகத் பாசில், நான் என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இருக்கிறோம்.
நீதித்துறை, காவல்துறை என இயக்குநர் நிறைய ஆராய்ச்சி செய்து இந்தக் கதையினை உருவாக்கியுள்ளார் இயக்குநர். இப்படியொரு கதையில் ரஜினி சார் இருப்பது சந்தோஷம். அதில் நானும் இருக்கிறேன் என்பது கூடுதல் சந்தோஷம்”
இவ்வாறு ராணா தெரிவித்துள்ளார்.