’புறநானூறு’ படம் டிராப்? – பின்னணியில் நடப்பது என்ன?

‘புறநானூறு’ படம் டிராப் ஆகிவிட்டது என்று பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா, துல்கர் சல்மான், நஸ்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகவிருந்த படம் ‘புறநானூறு’. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவாகவிருந்த 100-வது படம் இதுவாகும். சூர்யாவின் 2டி நிறுவனமே இந்தப் படத்தினை தயாரிக்க இருந்தது. படப்பிடிப்பு தொடங்குவதற்கான முன்பணிகள் அனைத்துமே மதுரையில் நடைபெற்று வந்தது.

இதனிடையே, யாரும் எதிர்பாராத விதமாக இந்தப் படத்தின் பணிகள் தொடங்க சிலகாலமாகும் என்று சூர்யா மற்றும் சுதா கொங்காரா இருவரும் கூட்டாக அறிவித்திருக்கிறார்கள். இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. மேலும், பலர் படம் டிராப் ஆகிவிட்டது எனவும் தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்து விசாரித்த போது, ‘புறநானூறு’ படத்தின் இறுதிவடிவ திரைக்கதை சுதா கொங்காரா மற்றும் சூர்யாவிற்கு முழுமையாக திருப்தி அளிக்கவில்லை. எப்போதுமே முழுமையாக நம்பிக்கை இல்லை என்றால் அந்தப் படத்தினை தொடங்கமாட்டார் சுதா கொங்காரா. அவரும் சூர்யாவுடன் அமர்ந்து பேசி, சில காலம் எடுத்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அதே போல், சூர்யாவுக்கும் இந்திப் படம் தொடங்குவதற்கான முன்பணிகள் அதிகமாக இருக்கிறது. கதை விவாதம், வாள் பயிற்சி, உடலமைப்பு மாற்றம் என பல பணிகள் இருப்பதால், ‘புறநானூறு’ படத்தினை சில மாதங்கள் கழித்து தொடங்க முடிவெடுத்துள்ளார். ஆகஸ்ட் மாதத்தில் மும்பையில் இந்திப் படமான ‘கர்ணா’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதனை ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கவுள்ளார். சுமார் 300 கோடி ரூபாய் செலவில் இரண்டு பாகங்களாக உருவாகிறது.

இவை அனைத்தையும் கணக்கில் கொண்டே ‘புறநானூறு’ படத்தினை தள்ளிவைத்திருக்கிறார் சூர்யா என்கிறார்கள். மேலும், இந்தப் படம் கண்டிப்பாக டிராப் கிடையாது. தற்போதைய சூழலில் இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

 

Read Previous

இந்தியில் உருவாகும் ‘நாயக் 2’

Read Next

மார்ச் 29 ஆம் தேதி வெளியாகும் நேற்று இந்த நேரம்