பிரபாஸை ஜோக்கர் என்று கூறி சிக்கலில் மாட்டியிருக்கிறார் பாலிவுட் நடிகர் அர்சாத் வர்ஷி
நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப்பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கல்கி 2898 ஏடி’. வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இந்தப் படம் 1100 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. தற்போது வரை மல்டிப்ளக்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டு வருகிறது.
இந்தப் படத்தின் வசூலால் பல்வேறு திரையுலக பிரபலங்கள் ஆச்சர்யப்பட்டுப் போனார்கள். தற்போது ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் பிரபாஸ் ஜோக்கர் போல் இருந்ததாக பாலிவுட் நடிகர் அர்சாத் வர்ஷி தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து இணையத்தில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
‘கல்கி 2898 ஏடி’ படம் குறித்து அர்சாத் வர்ஷி கூறியிருப்பதாவது:
“எனக்கு ‘கல்கி 2898 ஏடி’ படம் பிடிக்கவில்லை. படத்தில் அமிதாப் ஜி நம்பும்படியாக இருந்தார். அவரை என்னால் புரிந்தால் கொள்ள முடியவில்லை. அவருக்கு இருக்கும் அதிகாரம் நமக்கு கிடைத்தால் நம் உயிர் போய்விடும். மேலும், அந்தப் படத்தில் பிரபாஸ் ஜோக்கர் போல் இருந்தார். நான் சோகமாகி விட்டேன். மேட் மேக்ஸ் பார்க்க வேண்டும் என்று சென்றால் அங்கு மெல் கிப்சனை தான் பார்க்க வேண்டும். ஆனால் ஏன் இப்படிச் செய்தார்கள் என எனக்குப் புரியவில்லை”
இவ்வாறு அர்சாத் வர்ஷி தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்தை முன்வைத்து அர்சார் வர்ஷியை பலரும் கடுமையாக சாடி வருகிறார்கள். விரைவில் தன் கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.