இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் ‘பொண்ணு’

ஆர்ட்சீ மீடியா புரொடக்ஷன், இந்தோ சைனீஸ் கோ புரொடக்ஷன் நிறுவனங்கள் தயாரிப்பில், ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘லட்கி’. நாயகியை மையமாக வைத்து உருவாகும் இப்படம் தமிழில் ‘பொண்ணு’ என்ற பெயரில் ஜுலை 15ம் தேதி வெளியாக உள்ளது.

மார்ஷியல் ஆர்ட்ஸ் வீராங்கனை பூஜா பலேகர் முதன்மைக் கதாபாத்திரத்தில், சண்டை காட்சிகளில் நடித்து அசத்தியுள் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, இன்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ராம் கோபால் வர்மா பேசுகையில்,

இந்தப் படம் எனக்கு மிகவும் சவாலான, மனதிற்கு, பிடித்த படம். கல்லூரி நாட்களில் இருந்தே புரூஸ்லி என் இதயத்திற்கு நெருக்கமானவராக இருந்துள்ளார். அவர் படங்களை நான் தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறேன். அவரின் படங்கள் போல் இந்தியாவில் மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்கள் வந்ததில்லை. நான் இயக்குநராக வந்த பிறகு மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்கள் எடுக்கலாம் என நினைத்தேன். ஆனால் அது தள்ளிப்போனது. இறுதியாக இந்தப்படம் எடுக்க நினைத்த போது புரூஸ்லீயின் உருவம் என் மனதில் வந்து போனது. அவர் மிக ஒல்லியான உருவம் கொண்டவர், ஆனால் திரையில் அவர் தரும் மேஜிக் அற்புதமானது. அதே நேரம் ஒரு பெண்ணை வைத்து எடுத்தால் என்ன என எனக்குத் தோன்றியது. 

பலரைத் தேடி கடைசியாக பூஜா பலேகர் குறித்து கேள்விபட்டு சந்தித்தேன். அவரின் திறமைகள் பார்த்து வியந்தேன். அவரின் வீடியோவை மார்ஷியல் ஆர்ட்ஸ் பிறப்பிடமான சைனாவின் ஒரு கம்பெனியிடம் காட்டினேன். அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். பிறகு இந்தப்படத்தை அவர்களுடன் இணைந்து தயாரித்தேன். கோவிட் காரணங்களால் இந்தப்படம் தாமதமாகிவிட்டது. அனைத்து மொழிகளிலும் இந்தப்படத்தை ஒரே நேரத்தில் வெளியிட வேண்டும் என திட்டமிட்டோம். ஹைதராபாத்தில் புரூஸ் லியின் எண்டர் தி டிராகன் திரைப்படம் பார்க்க என்னிடம் பணம் இல்லை. ஆனால் இப்போது என்னுடைய மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் அதே தியேட்டரில் வெளியாகவுள்ளது மகிழ்ச்சி. என் கனவு இப்போது நனவாகியிருப்பது சந்தோஷம்.

நடிகை பூஜா பலேகர் பேசுகையில்,

நான் இந்த படத்திற்காக இங்கு வந்ததில் சந்தோஷமடைகிறேன். போன முறை நான் சென்னை வந்த போது தற்காப்பு கலை வீரராக வந்தேன். இன்று நடிகையாக இங்கு வந்துள்ளேன். ராம் கோபால் வர்மா சார் உடைய படத்தில் நான் நடித்தது, எனக்கு கனவு போல் உள்ளது. நான் ராம் கோபால் வர்மா சாரின் ரசிகை. இன்று அவரது இயக்கத்தில் ஒரு தற்காப்புக் கலை படத்தில் நடிப்பதில் பெருமை அடைகிறேன். இந்த படம் சீனாவில் 40,000 திரைகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக நான் அழைக்கப்பட்ட போது, எனது சண்டை முறைகள் அவருக்கு பிடித்திருந்தது. பின்னர் சில பயிற்சிகளை செய்தேன். அதன் பிறகு படப்பிடிப்பு துவங்கியது. எனக்கு நடிப்பில் முன் அனுபவம் எதுவும் இல்லை. இயக்குனர் ராம் கோபால் வர்மா சார் தான், எல்லா உணர்வுகளையும் வெளியே கொண்டு வர உதவினார். நான் புரூஸ்லி  உடைய ரசிகை, படத்திலும் அப்படியொரு கதாபத்திரத்தில் நடித்தது மகிழ்ச்சி. இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். தியேட்டரில் வந்து படம் பாருங்கள், ஆதரவு தாருங்கள்.
 

Read Previous

50வது நாளைக் கொண்டாடிய ‘நெஞ்சுக்கு நீதி’ படக்குழுவினர்

Read Next

படைப்பாளன் – விமர்சனம்

Most Popular