பள்ளிக்கூடத்திற்கு அகவை 15… நினைவுகளில் தங்கர் பச்சான்

இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “பள்ளிக்கூடம்”. இப்படம் வெளிவந்து சுமார் 15 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், அதன் நினைவலைகளை இயக்குனர் அறிக்கை ஒன்றில் வெளியிட்டுள்ளார்.

அதில், “ அனைவருக்குமான பள்ளிக்கூடத்தை நினைவூட்டி படம் பார்த்தவர்கள் அனைவரின் மனதிலும் குடி கொண்ட திரைப்படம் பள்ளிக்கூடம். 15 ஆண்டுகள் கடந்த பின்பும் அடிக்கடி நினைவு கூறும் படமாகவும் அமைந்தது. அந்நாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் படத்தைக் கண்டு களித்தார். 

மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கையின் படி தமிழகம் முழுவதுமான அனைத்து பள்ளிகளுக்கும் திரையிட்டுக் காண்பிக்க தீர்மானம் நிறைவேற்றி அதன் படி காண்பிக்கப்பட்டது. அரசு வரிச்சலுகை வழங்கி மக்களை ஊக்கப்படுத்தியது. இப்பொழுதும் இந்தத் தலைமுறையினரும் காணும் படமாக உள்ளது. அரசுப் பள்ளிகளை மூடாமல் தற்காத்துக்கொள்ள முயற்சிக்கும் தமிழக அரசு இப்பொழுது நினைத்தால் கூட அதேபோன்று அனைத்துப் பள்ளி மாணவர்களும் காண ஆணை பிறப்பிக்கலாம். 

இப்படத்திற்குப் பின்னர் தான் முன்னாள் மாணவர் சங்கம் முழு மூச்சுடன் இயங்கத் தொடங்கியது. உலகின் மூலை முடுக்கில் உள்ளவர்கள் எல்லாம் தன்னை உருவாக்கிய பள்ளிக்கூடங்களைப் புனரமைத்துப் புதுப்பிக்க நன்கொடைகளை வாரி வழங்கினார்கள். அரசுப் பள்ளிகள் பொலிவு பெற்றன. எனக்கு தமிழக அரசின் சிறந்த இயக்குநர் விருதும் கிடைத்தது.” என்று கூறியுள்ளார். 
 

Read Previous

எம்.ஜி.ஆர்.பிறந்த நாளில் வெளியாகும் ”சிரித்து வாழ வேண்டும்”

Read Next

ஜீ5’ல் வெளியாகும் சசிகுமாரின் “காரி”

Most Popular