24ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி. ராஜா தயாரிப்பில், மோகன்ராஜா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேலைக்காரன்’ நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.
தொடர்ந்து ரசனையான கதாபாத்திரங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் ‘வேலைக்காரன்’ படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் அவருடைய திரையுலக வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையைத் தரும் என படத்தில் பணியாற்றியுள்ள பல கலைஞர்களும் தெரிவித்துள்ளார்கள்.
‘வேலைக்காரன்’ பற்றி சிவகார்த்திகேயன் கூறுகையில்,
”அதிர்ஷ்டம் வாய்ப்புகளைத் தரலாம், ஆனால் கடும் உழைப்பு மட்டுமே வெற்றியை தரும் என்பதை நம்புபவன் நான். ‘வேலைக்காரன்’ படம் எனக்கு கிடைத்தது ஒரு அதிர்ஷ்டம். மோகன் ராஜா சாரின் இந்த அற்புதமான கதையில் வெற்றி பெற கூடுதல் உழைப்பு போட்டுளேன்.
‘வேலைக்காரன்’ படத்தின் ஹீரோ கதைதான். இந்த ஹீரோவுக்கு ஈடு கொடுக்க நான் உள்ளிட்ட எல்லா நடிகர்களும், அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் உழைத்துள்ளோம். எந்த ஒரு சமுதாயத்துக்கும் இதயத் துடிப்பாக இருக்கும் உழைக்கும் வர்க்கத்தைப் பற்றிய படம் இது.
எல்லோரின் வாழ்விலும் நடக்கும் நிகழ்வுகள் தான் இந்தப் படம். இந்தப் படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரும், தொழில்நுட்பக் கலைஞர்களும் அவர்களது சிறப்புக்கும் மேல் சிறப்பு சேர்த்துள்ளனர். இது போன்ற ஒரு அணியுடன் பணிபுரிந்தது எனது அதிர்ஷ்டம்.
தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா அவர்களின் ஆதரவு, ஊக்கம், கனவு மற்றும் இயக்குனர் மோகன் ராஜா சாரின் கதை, எழுத்து மற்றும் அதை அவர் படமாக்கியுள்ள விதம் ஆகியவை ‘வேலைக்காரன்’ படத்தை இவ்வளவு சிறப்பாக்கியுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்கள் ‘வேலைக்காரன்’ படத்தை ரசித்து, கொண்டாடி பாராட்டுவார்கள் என உறுதியாக நம்புகிறேன்,’’ என்கிறார் சிவகார்த்திகேயன்.
வரப்போகும் விடுமுறையை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படமாக ‘வேலைக்காரன்’ இருக்கும் என படக்குழுவினர் அனைவரும் தெரிவித்துள்ளனர்.