ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் அருள்நிதி, அஜ்மல், மஹிமா நம்பியார் மற்றும் பலர் நடிக்க, மு. மாறன் இயக்கியிருக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் முதல் ரசிகனாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் டில்லி பாபு இருக்கிறார்.
உலகமெங்கும் மே 11ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தையும், படக்குழுவையும் மகிழ்ச்சியோடு பாராட்டுகிறார் டில்லி பாபு.
“திரில்லர் வகை படங்களின் தீவிர ரசிகனாக இருப்பதால், இயக்குனர் மு. மாறனின் கதை சொல்லலை கண்டு வியந்தேன். சொன்ன கதையை திரையில் காட்சிகளாக சிறப்பாக, திறமையாகக் கொண்டு வந்தது மகிழ்ச்சி. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் சீட்டின் நுனிக்கு வரவைக்கும் காட்சிகள் நிறைய உள்ளன. அவை உங்கள் கண்களை இமைக்க விடாது. ஈர்க்கக் கூடிய விஷயங்களை திரைக்கதையில் சரியாக பிணைத்துள்ளார்.
சமீபத்திய மியூசிக் சென்சேஷன் சாம் சிஎஸ், படத்துக்கு இசையமைப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். பின்னணி இசையில் தனக்கு ஒரு தனி பாணி உண்டு என்று இந்த படத்திலும் தன் திறமையால் நிரூபித்திருக்கிறார் சாம்.
மொத்த படத்திலும் அருள்நிதி ஒரு மிஸ்டர் பர்ஃபெக்ட்டாக இருந்தார். தனது நடிப்பை மெருகேற்ற அவர் காட்டிய ஈடுபாடு ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலித்தது. ‘மௌன குரு’ எப்படி அவரின் கேரியரை உயர்த்தியதோ, அப்படி இந்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ அவரை அடுத்த தளத்துக்குக் கொண்டு செல்லும்.
‘ரெமோ, வேலைக்காரன்’ போன்ற பிரம்மாண்ட படங்களைத் தந்த 24 AM ஸ்டுடியோஸின் ஒரு அங்கமான 24 PM இந்த படத்தோடு கை கோர்த்திருப்பது பெருமையான விஷயம்,” என்கிறார் டில்லிபாபு.