புதிய கல்விக் கொள்கை குறித்த பல கருத்துக்களை நடிகர் சூர்யா சில தினங்களுக்கு முன்பு பேசியிருந்தார். நுழைவுத் தேர்வு, தகுதித் தேர்வு ஆகியவற்றிற்கு சூர்யா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவருடைய கருத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.
சூர்யாவின் கருத்துக்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு கிடைத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் அவரைப் பாராட்டி வருகிறார்கள். அன்புமணி ராமதாஸ், சீமான் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகர் கமல்ஹாசன் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
“ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்துவருகிறார்கள்.
எனவே கல்வி குறித்துப் பேசுவதற்கான உரிமை சூர்யாவுக்கு உண்டு.
புதிய கல்விக் கொள்கை குறித்த தம்பி சூர்யாவின் கருத்துகள் பலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு.
மக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்ற ‘வரைவு அறிக்கை’ மீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப் போக்கினை மக்கள் நீதி மையம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.