ராதிகா குழுவுக்கு ஒத்துழைப்பு இல்லை – ஃபெப்ஸி அறிவிப்பு

FEFSI Press Meet Stillsதென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தை (FEFSI)  உடைக்க முயற்சித்ததற்காகவும், புதிய ஊதிய ஒப்பந்தத்தை போட காலம் தாழ்த்தி வருவதாலும், நடிகை ராதிகா குழுவுக்கு எந்த ஒத்துழைப்பும் வழங்குவதில்லை என ஃபெப்ஸி தலைவர் அமீர் அறிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

“சின்னத்திரை தயாரிப்பளர்களிடம் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஒப்பந்தம் போடுவது வழக்கம். ஆனால் இந்த முறை ஒப்பந்த காலம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை புதிய ஒப்பந்தம் போடப்படவில்லை.

இருப்பினும் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட கூடாது என்ற காரணத்தினால சென்ற ஆண்டு தற்காலிக ஒப்பந்தம் போட்டு வேலை செய்துக்கொண்டு இருந்தோம். அதுவும் சென்ற மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. இதற்கிடையில் பேச்சுவார்த்தைக்கு பலமுறை சின்னத்திரை நிர்வாகிகளை அழைத்தும் அவர்கள் கலந்துகொள்ளவில்லை.

தொழிலாளர் நல ஆணையரிடம் புகார் கொடுத்தும், அங்கும் ராதிகா பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் தொழிலாளர் நல ஆணையர் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான முடிவு எடுக்கும்படி ஆலோசனை கூறினார். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் மீண்டும் தன்னிடம் புகார் கொடுக்கும்படி கூறினார்.

அதன்படி பேச்சுவார்த்தை நடத்த கடிதம் அனுப்பியும் அதை மதிக்காமல் ஃபெப்ஸியை உடைத்து, புதிதாக ஒரு தொழிற் சங்கத்தை ஆரம்பிப்போம் என்று கூறி, சின்னத்திரையின் தலைவி ராதிகா அவர்கள் தனது ராடான் அலுவலகத்தில் புதிதாக விண்ணப்ப படிவம் கொடுத்து வருகிறார். இதைக் கண்டித்து ராதாரவி, சரத்குமார் அவர்களிடம் பல முறை முறையிட்டோம்.

அவர்களும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி சின்னத்திரை சார்பாக எந்தவித பதிலும் அளிக்காததால் ராதிகா குழுவைச் சார்ந்த சின்னத்திரை தயாரிப்பாளர்களுக்கு நாளை (ஆகஸ்ட் 16) முதல் எந்தவித தொழில் ஒத்துழைப்பும் தருவதில்லை என பெப்ஸி முடிவு செய்துள்ளது,” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Read Previous

நேற்று விஜய்…இன்று தயாரிப்பாளர்…

Read Next

ஆதலால் காதல் செய்வீர் – விமர்சனம்

Most Popular