‘தலைவா’ படம் வெளிவர தாமதமாகி வரும் சூழ்நிலையில் நேற்று விஜய் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இன்று ‘தலைவா’ படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
‘அம்மா’ நான் ஒரு திரைப்பட தயாரிப்பாளர். இதற்கு முன் இரண்டு படங்கள் தயாரித்து நல்ல விதமாக வெளியிட்டு இருக்கிறேன். நான் ஒரு நல்ல தயாரிப்பாளனாகவும், நாணயமான தயாரிப்பாளனாகவும் தமிழ்த்திரை உலகில் பேர் எடுத்து இருக்கிறேன்.
கடந்த 4 வருடங்களாக முயற்சி செய்து நடிகர் விஜய்யின் கால்ஷீட் பெற்று பல கோடிகள் கடன் வாங்கி மிகுந்த பொருட்செலவில் இந்த ‘தலைவா’ திரைப்படத்தை தயாரித்து இருக்கிறேன்.
கடந்த 9.8.2013 அன்று படத்தை வெளியிடுவதாக விநியோகஸ்தர்களிடம் ஒப்பந்தம் செய்து இருக்கிறேன்.
இந்த ’தலைவா’ திரைப்படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தியேட்டர்களுக்கு யாரோ இந்த திரைப்படத்தை வெளியிட கூடாது என்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள். இதனால் தியேட்டர் அதிபர்கள் படத்தை திரையிட பயந்து படம் 9–ந்தேதி வெளியிட முடியாமல் ஆகிவிட்டது.
ஆனால் அதே நாளில் வெளிநாடுகளிலும், கேரளா, கர்நாடக, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களிலும் படம் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டும் வெளிவராமல் நின்றுவிட்டது.
இதற்கு இடையில் இன்டர்நெட்டிலும் திருட்டு வி.சி.டிகளிலும் படம் வெளி வந்த வண்ணம் உள்ளன. இதனால் எனக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்படும் நிலைமை உருவாகிவிட்டது. இந்த படம் இந்த வாரம் கூட அதாவது 16.8.2013 (நாளை) அன்று கூட வெளியாகாவிட்டால் எனக்கு மிகவும் பொருள் நஷ்டம் ஏற்பட்டு, எல்லோருக்கும் மிகுந்த நஷ்டமும், மன உளைச்சலும் ஏற்படும்.
இதனால் இந்தப்படத்தில் சமந்தப்பட்ட அனைவரும், திரையரங்க உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் என எல்லோரும் பாதிக்கப்படுவார்கள். நானும், எனது குடும்பமும் நடுரோட்டுக்கு வரும் நிலை ஏற்படும். தமிழ்நாட்டில் பல குடும்பங்களை காப்பாற்றும் நீங்கள், தயயுசெய்து என்னையும், என் குடும்பத்தையும் காப்பாற்றுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.