விஜய்மில்டன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘கோலிசோடா 2’ படத்தில் தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் கிரிஷா க்ரூப்.
இதற்கு முன் =அழகு குட்டி செல்லம், கூட்டாளி’ ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் தனக்கு ‘கோலிசோடா-2’ ஒரு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் தந்திருக்கிறது என பெருமைப்படுகிறார் க்ரிஷா க்ரூப்.
கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும் வளர்ந்தது மும்பையில் இருந்தாலும் தமிழ் நன்றாகவே பேசுகிறார். சில வருடங்களுக்கு முன்பே மலையாளத்தில் ஒரு படத்தில் அறிமுகமானாலும் சினிமாவை நன்கு தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே விஸ்காம் படித்துவிட்டு மீண்டும் திரையுலகில் நுழைந்திருக்கிறார்.
தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஏஞ்சலினா’ படத்தில் டைட்டில் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கிரிஷா. தன்னைப் பற்றியும், ஏஞ்சலினா பற்றியும் அவர் கூறியதாவது,
“பரதநாட்டியம் எனது உயிர் மூச்சு. நான் நடித்த மலையாள படத்தை பார்த்துவிட்டுத்தான் ‘அழகு குட்டி செல்லம்’ பட வாய்ப்பு என்னைத் தேடிவந்தது. தொடர்ந்து ஆண்டனி இயக்கத்தில் ‘சாலை’ என்கிற படத்தில் நடித்தேன். அதன்பின் வந்த வாய்ப்புதான் ‘கோலிசோடா-2’.
விஜய் மில்டன் சார் என்னை முதலில் அழைத்தது வேறு ஒரு படத்திற்குத்தான்.. ஆனால் அப்படியே காட்சிகள் மாறி ‘கோலிசோடா-2’ படத்தைத் துவங்கி அதில் என்னை கதாநாயகியாகவும் ஆக்கிவிட்டார்.
கோலிசோடா முதல் பாகத்துக்கு மிகப்பெரிய ரசிகை நான். அதன் இரண்டாம் பாகத்தில் நான் நடித்தது என்னுடிய அதிர்ஷ்டம் தான். எனக்கு அடையாளம் தந்தது என்றால் அது ‘கோலிசோடா-2’ தான்.
இந்தப் படத்தில் சமுத்திரக்கனி சாருடன் நடித்தபோது சினிமா குறித்த நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள முடிந்தது. மொட்டை மாடியிலிருந்து குதிக்கும் காட்சியில் சற்று பயமாக இருந்தது. ஆனால் ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் அந்தக் காட்சியில் ஒரு கீறல் கூட விழாமல் என்னையே நடிக்க வைத்தார்.
நடிப்பில் தனது ரோல் மாடல்கள் என்றால் ரேவதி, ஷபானா ஆஸ்மி, ஸ்மீதா பாட்டீல் ஆகியோர்தான்.
‘ஏஞ்சலினா’ படத்தில் டைட்டில் ரோலில் நடித்து வருகிறேன். திடீரென ஒருநாள் சுசீந்திரன் சார் அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. ஆடிஷனும் ஓகே ஆனது. இப்போதுவரை அவர், எப்படி என்னை இந்த கேரக்டருக்காக தேர்வு செய்தார் என்கிற விஷயம் கூட எனக்கு தெரியாது.
சுசீந்திரன் சாரின் ‘வெண்ணிலா கபடி குழு, அழகர்சாமியின் குதிரை’ இரண்டும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எல்லோரும் காமெடி நடிகராக பார்த்த ஒருவரை அவர் வேறு கோணத்தில் காட்டியிருப்பார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பார்.
அவரது பிலிம் மேக்கிங் ஸ்டைலே புதிதாக இருக்கும்,” என்கிறார் கிரிஷா.
‘ஏஞ்சலினா’ படம் வெளிவந்த பிறகுதான் புதிய பட வாய்ப்புகளைப் பற்றி யோசிப்பாராம்.