திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி பத்து வருடங்கள் கழித்து கன்னடப் பட உலகில் அறிமுகமானார் த்ரிஷா. அவர் நடித்த முதல் கன்னடப் படமான ‘பவர்’ திரைப்படம் 50 வது நாளைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தெலுங்கில் சீனு வைட்லா இயக்கத்தில் மகேஷ் பாபு, சமந்தா நடித்து 2011ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘தூக்கடு’ படத்தின் ரீமேக்தான் கன்னட ‘பவர்’ திரைப்படம்.
புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா நடிக்க தமன் இசையமைப்பில் கே.மாதேஷ் இயக்கிய இப்படம் ஆகஸ்ட் 28ம் தேதி வெளியானது. கன்னடத் திரையுலகில் இதுவரை வந்த பல படங்களின் சாதனையை இந்தப் படம் முறியடித்து இரண்டே வாரத்திலேயே 15 கோடி ரூபாயை வசூலித்து சாதனை புரிந்தது. இதுவரை மொத்தமாக சுமார் 50 கோடி ரூபாய் வரை இந்தப் படம் வசூலித்திருக்கும் எனச் சொல்கிறார்கள்.
கன்னடத்தில் நடித்த முதல் படத்திலேயே அதிர்ஷ்டகரமான நாயகி என த்ரிஷா பெயர் வாங்கிவிட்டார். கன்னடத்தில் நடிக்க அவருக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம்.
தற்போது தமிழில் அஜித் ஜோடியாகவும், ஜெயம் ரவி ஜோடியாகவும் மற்றுமொரு பெயரிடப்படாத படத்திலும் த்ரிஷா நடித்து வருகிறார்.