‘தாமிரபரணி’ படத்திற்குப் பிறகு இயக்குனர் ஹரி, விஷால் மீண்டும் இணைந்த படமான ‘பூஜை’ திரைப்படம் தீபாவளியன்று திரைக்கு வர உள்ளது.
விஜய் நடித்த ‘கத்தி’ படமும், விஷால் நடித்த ‘பூஜை’ படம் மட்டுமே இந்த வருட தீபாவளிக்கு வெளிவருவதால் இந்த இரண்டு படங்களுக்கு இடையே மட்டும்தான் போட்டி உள்ளது.
‘பூஜை’ படத்திற்கான முன்பதிவு தமிழகம் முழுவதும் ஆரம்பமாகி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. விஷாலுடன், ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்திருக்கிறார். ஸ்ருதிக்கு தெலுங்கிலும் பிரமாதமான வரவேற்பு இருப்பதாலும், விஷால் நடித்த படங்கள் ஏற்கெனவே தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி இருப்பதாலும் இந்த படமும் ‘பூஜா’ என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாகிறது.
தமிழ்நாட்டில் சுமார் 400 திரையரங்குகள், கேரளாவில் 100 திரையரங்குகள், தெலுங்கில் 500 திரையரங்குகள் வெளிநாடுகளில் 100 திரையரங்குகள் என ஆயிரத்து நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘பூஜை’ படம் வெளியாகிறது.
சென்னையில் மட்டும் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. இவற்றில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளும் உள்ளன.
இயக்குனர் ஹரி தொடர்ச்சியாக வெற்றிப் படங்களைக் கொடுத்து வருவதாலும், ‘பாண்டிய நாடு’ படத்திற்குப் பின் விஷாலுக்கும் மிகப் பெரிய திருப்பு முனை ஏற்பட்டுள்ளதாலும், ‘பூஜை’ படத்திற்கும் நல்ல வரவேற்பு இருப்பதாக திரையரங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.