போராட்டம், சர்ச்சை, விளக்கம், என நீண்ட இழுபறிக்குப் பிறகு ‘கத்தி’ திரைப்படம் ஒரு வழியாக நேற்று வெளியானது. தீபாவளிக்கு முன் தினமான 21ம் தேதிதான் படத்திற்கான முன்பதிவு ஆரம்பமானாலும் அடுத்த ஏழு நாட்கள் வரை பெரும்பாலான டிக்கட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மற்ற மாநிலங்கள், வெளிநாடுகள் என ‘கத்தி’ வெளியான நேற்றைய முதல் நாளில் மட்டும் அனைத்துத் திரையரங்குகளும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடியிருக்கிறதாம். ஒரு சில இடங்களில் மட்டுமே சில டிக்கட்டுகள் கிடைத்திருக்கின்றன.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, பெங்களூர், திருவனந்தபுரம், கொச்சி போன்ற பல மாநகரங்களில் ஸ்பெஷல் காட்சிகளுடன் சேர்த்து லட்சக்கணக்கானோர் படத்தைப் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.
முதல் நாள் வசூல் மட்டுமே சுமார் 15 கோடி ரூபாய் வரை இருந்திருக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள். அடுத்த சில நாட்களில் வசூல் 50 கோடியைக் கடக்கும் என்கிறார்கள்.
விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியின் முந்தைய படமான ‘துப்பாக்கி’ படத்தின் வசூலை ‘கத்தி’ சீக்கிரமே முறியடித்துவிடுமாம்.
விஜய் இதுவரை நடித்த படங்களிலேயே ‘கத்தி’ படம்தான் அவருக்கு மதிப்பையும், மரியாதையையும் தேடிக் கொடுக்கும் படமாக இருக்கும் என நடுநிலை சினிமா ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.