‘கத்தி’ படம் வெளியான பின் முதல் நாளில் எவ்வளவு தொகையை வசூலித்தது என்பதை பல திரையுலக ரசிகர்களும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினர்.
நாம் விசாரித்தவரையில் முதல் நாளில் சுமார் 15 கோடி ரூபாய் அளவிற்கு வசூலித்திருக்கலாம் என திரையுலக வட்டாரங்கள் தெரிவித்ததாக இதற்கு முன் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம்.
நேற்று படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவருடைய டிவிட்டரில் படத்தின் முதல் நாள் வசூல் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, வட இந்தியா ஆகிய இடங்களில் 16 கோடியே 45 லட்சம் ரூபாயையும், வெளிநாடுகளில் 7 கோடியே 35 லட்ச ரூபாயையும், ஆக மொத்தமாக 23 கோடியே 80 லட்ச ரூபாய் வசூலித்தது என தெரிவித்தார்.
ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐங்கரன் கருணாமூர்த்தியின் நிறுவனமான ஐங்கரன் நிறுவனத்தின் டிவிட்டரில் கூடுதலாக இன்னும் 2 கோடியைச் சேர்த்து வசூல் கணக்கை வெளியிட்டிருந்தார்கள். பல வெளிநாடுகளில் ஐங்கரன் நிறுவனம்தான் ‘கத்தி’ படத்தை வெளியிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐங்கரன் கணக்குப்படி, “தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, வட இந்தியா ஆகிய இடங்களில் 16 கோடியே 45 லட்ச ரூபாயையும், வெளிநாடுகளில் 9 கோடியே 50 லட்சம் ரூபாயையும், ஆக மொத்தமாக 25 கோடியே 95 லட்ச ரூபாயை வசூல் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இயக்குனர் முருகதாஸ் வெளியிட்ட கணக்கில் சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, டென்மார்க், ஹாலந்து, நார்வே ஆகிய நாடுகளின் வசூல் தொகை இடம் பெறவில்லையாம். அவற்றையும் கணக்கிட்டு அதன் பின் ஐங்கரன் புதிய வசூல் தொகையை வெளியிட்டதாகச் சொல்கிறார்கள்.
இந்த முதல் நாள் வசூல் தொகை இத்துடன் முடிந்ததா…இன்னும் இருக்கிறதா…என்பதைத் தெரிந்து கொள்ள கொஞ்சம் பொறுத்திருப்போம்….