ரவுடியிசத்தின் பின்னணியைச் சொல்ல வரும் ‘காவல்’…

அதிகம் படித்தவர்களும் சினிமா மீதுள்ள ஆர்வத்தில் தமிழ்த் திரையுலகத்தில் பல துறைகளில் சாதனை படைத்து வருகிறார்கள். அந்த வரிசையில் பி.எச்டி முடித்து உதவி இயக்குனராகப் பணியாற்றி தற்போது ‘காவல்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார் நாகேந்திரன்.

இவர் ‘5 ஸ்டார், கந்தசாமி’ படங்களை இயக்கிய சுசிகணேசனிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர்.

தற்போது விமல், கீதா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள ‘காவல்’ என்ற படத் இயக்கி உள்ளார். விரைவில் இந்தப் படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்காக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தப் படத்திற்காக ஸ்பெஷலாக ஆராய்ச்சி செய்து படமாக்கினேன் என்றார்.

“நான் பி.எச்டி படித்துக் கொண்டிருந்த போது ரவுடியிசத்தைப் பற்றித்தான் ஆராய்ச்சி செய்தேன். அப்போதுதான் அதன் பின்னணியில் என்னென்ன விஷயங்கள் நடக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டேன். அதை அடிப்படையாக வைத்துத்தான் இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளேன்.

இந்தப் படத்தை நான் இயக்குகிறேன் என்று சொன்ன போது பலரும் நம்பவில்லை. நண்பன் சமுத்திரக்கனி கூட முதலில் நடிக்கத் தயங்கினார். அதன் பின் இந்தப் படத்தின் கருவான “20 வருஷத்துக்கு முன்னால மதுரையில நட்புக்காக கொலை பண்ணாங்க, திருநெல்வேலி, தூத்துக்குடில ஜாதிக்காகப் பண்ணாங்க, திருச்சியில ரவுடியிசத்துக்காகப் பண்ணாங்க, கோயமுத்தூர்ல தொழிலுக்காகப் பண்ணாங்க, கடலூர், விழுப்புரத்துல அரசியலுக்காகப் பண்ணாங்க, சென்னையில மட்டும்தான் பணத்துக்காகக் கொலை பண்ணாங்க, இன்னைக்கு அது வைரஸ் மாதிரி நாடு பூரா பரவியிருக்குன்னா, அதுக்கு யார் காரணம்,” கற டயலாக்கைச் சொன்னேன். உடனே, எப்ப ஷுட்டிங் போலாம்னு கேட்டாரு.

இந்தப் படத்தோட கதைக்கு ரொம்ப பொருத்தமா இந்தக் ‘காவல்’ங்கற டைட்டில் இருக்கும்னு பலர் சொன்னதாலதான், பழைய டைட்டிலை மாத்தினோம். ‘காவல்’ காவல் துறைக்கும் பெருமை சேர்க்கும் படமாக இருக்கும்,” என்றார் இயக்குனர் நாகேந்திரன்.

Read Previous

Masss – Official Teaser

Read Next

வித்தியாசமான கதைக் களத்தில் ‘வை ராஜா வை’…