‘லிங்கா’ படத்தின் நஷ்ட ஈடு விவகாரம் இன்னும் நீ……ண்டு கொண்டே போகிறது.
கடந்த வாரம் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ‘லிங்கா’ திரைப்பட வினியோகஸ்தர்கள் சிங்காரவேலன், ரூபன், கிஷோர்குமார், சமரசப் பேச்சின்படி நஷ்ட ஈட்டுத் தொகை இரு மாதங்களாகியும் பகிர்ந்து அளிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினர்.
சமரசப் பேச்சில் ஈடுபட்ட பிரபல வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் மீதும் சில கேள்விகளை எழுப்பினர்.
இரு தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அதற்கு திருப்பூர் சுப்பிரமணியம் விளக்கமளித்தார்.
அதைத் தொடர்ந்து நேற்று மீண்டும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த வினியோகஸ்தர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்கு உரிமையாளர்கள் இன்னும் ஒரு வாரத்திற்குள் நஷ்ட ஈட்டுத் தொகையை முழுவதுமாகத் தரவில்லை என்றால் வரும் 13ம் தேதி, ரஜினிகாந்த் வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்கள்.