இந்தியத் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக உலகப் புகழ் பெற்றவராக இருக்கும் ஏ.ஆர். ரகுமான், அவருடைய அக்கா ரைஹானாவின் மகனான ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் பாட உள்ளார் என்ற தகவல் கோடம்பாக்கத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
‘ராஜா ராணி’ படத்தையடுத்து அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க உள்ள புதிய படம் நாளை மறுநாள் 26ம் தேதி பிரம்மாண்டமாக ஆரம்பமாக உள்ளது.
இந்தப் படம் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் 50வது படம் என்று சிறப்புடன் தயாராக உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ‘ஜென்டில்மேன்’ படத்தில் ‘சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே….’ என்ற பாடலைப் பாடியவர்தான் ஜி.வி.பிரகாஷ்குமார்.
‘வெயில்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று நாயகனாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷின் 50வது படம் என்பதால் ஏ.ஆர்.ரகுமான் பாட சம்மதிப்பார் என்றே தெரிகிறது.
அப்படி ஒன்று நடந்தால் தன்னுடைய 20 ஆண்டு காலத்திற்கும் மேலான இசையுலக வாழ்க்கையில் வேறொரு இசையமைப்பாளரின் இசையில் ஏ.ஆர்.ரகுமான் பாடுவது இதுவே முதல் முறையாக இருக்கும்.
அக்கா மகன் ஜி.வி.பிரகாஷின் ஆசையை மாமா ரகுமான் நிறைவேற்றுவாரா ?