விஷால். காஜல் அகர்வால் நடிப்பில் வேந்தர் மூவிஸ் சார்பில் எஸ்.மதன் தயாரிக்கும் படம் ‘பாயும்புலி’. சுசீந்திரன் இயக்கியுள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ‘சிலுக்கு மரமே’ என்கிற சிங்கிள் ட்ராக் ஆடியோ வெளியீடு சென்னையில் நேற்று நடைபெற்றது. இயக்குநர் லிங்குசாமி வெளியிட இயக்குநர்கள் பாண்டிராஜும், திருவும் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் விஷால் பேசும் போது ” இப்படத்தின் இசை வெளியீட்டை ஆகஸ்ட் 2ல் நடத்த உள்ளோம் செப்டம்பர் 4ல் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.
“இது என் வாழ்க்கையில் முக்கியமான படம் என்று நினைக்கிறேன். நான் நடித்துள்ள போலீஸ் சம்பந்தப்பட்ட 3வது கதை. எப்போதும் என்னை இயக்கும் இயக்குநர் அந்தப் படத்தை அவரது பெஸ்டாக சிறந்த படமாக கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன். அவரிடம் சிறந்தது எல்லாம் எனக்கே கிடைக்க வேண்டும் என்று நினைப்பேன். குறிப்பாக க்ளைமாக்ஸ் சிறப்பாக வரவேண்டும் என்று நினைப்பேன். அதுதான் பார்ப்பவர் மனதில் தங்குவது .
பாண்டியநாடு எனக்கு பெரிய திருப்பு முனை. கிட்டத்தட்ட மறுபிரவேசம் போல உணர வைத்தது. இந்தப்படம் சுசீயின் சிறந்த படைப்பு. இமானின் சிறந்த படைப்பு என்றும் பேச வைக்கும். இன்றைக்கு ‘சிலுக்கு மரமே’ பாடல் வெளியாகி யுள்ளது. இதைவிட எனக்குப் பிடித்தது ‘யாரந்த முயல்குட்டி’ பாடல்.
வேந்தர் மூவிஸில் நடித்ததில் மகிழ்ச்சி. உங்களை மாதிரி தயாரிப்பாளர்கள் எங்களை மாதிரி நடிகர்களுக்கு கண்டிப்பாகத் தேவை. இப்படி நடிக்கும் போது சில படங்கள் திசை மாறிப் போய்விடும். அதனால் வேந்தர் மூவிஸில் நடிக்க எனக்கு ஆரம்பத்தில் பயம் இருந்தது, தயக்கம் இருந்தது, சந்தேகம் இருந்தது. அந்த பயத்தோடுதான் படத்தை தொடங்கினோம். போகப் போக புரிதல் ஏற்பட்டது.
நான் நினைத்தது தவறு என்று புரிந்தது. இனிமேல் இவர்களுடன் தொடர்ந்து பயணம் செய்யலாம் என நம்பிக்கை வந்திருக்கிறது. வெளிப் படங்களில் நடிக்கலாம் என்கிற நம்பிக்கையும் வந்திருக்கிறது. இது காஜலுடன் எனக்கு முதல் படம். சூரியும் நன்கு பழகினார். எங்கள் வீட்டிலிருந்து ஒரே கேரியரில் அவருக்கும் சாப்பாடு அனுப்பும் அளவுக்கு சூரி என் சகோதரர் போல ஆகிவிட்டார். நானும் திருவும் மீண்டும் இணைய இருக்கிறோம்.
மனசுல பட்டதை செய்கிறேன் நான் என்றும் தவறான வழியில் போய்விட மாட்டேன். இதில் அனல் அரசு அமைத்த க்ளைமாக்ஸ் காட்சி பேசப்படும்.
‘பாயும்புலி’ பற்றி ப் பல விதமாகக் கேட்கிறார்கள். அந்த தலைப்பை கேட்ட போது ஏவிஎம் பாலசுப்ரமணியம் அவர்கள் மறுப்பு கூறாமல் உடனே கொடுத்தார். இந்தப் பாயும் புலி தலைப்பு படத்துக்கு பெரிய பலம். சக்தியும் ஊக்கமும் தரும் தலைப்பு இது.
இது எதை நோக்கிப் பாயுது என்பது படத்தின் க்ளைமாக்ஸில் புரியும். இது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானதல்ல. உண்மைச் சம்பவத்தின் சாயல் தெரியலாம், இதே சாயலில் மதுரையில் நடந்துள்ளது.
செப்டம்பரில் பாயும் புலி தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது. வெளிநாடு போகத் திட்டமிட்டோம், இங்கேயே முடித்து விட்டோம் ஆனால் செலவு அதிகமாகி விட்டது, எல்லாம் நன்மைக்கே,” என விஷால் பேசினார்.