‘மாஸ்’ படத்தில் சூர்யாவிற்கு ஆவிகள் கண்களுக்குத் தெரிந்து ஆவிகளுடன் பேச ஆரம்பித்து அதன் மூலம் லட்சக் கணக்கில் பணம் சம்பாதிக்க ஆரம்பிப்பார்.
‘ஆவி குமார்’ படம் அதற்கு முன்பாகவே வந்திருந்தால், ‘மாஸ்’ படமே ‘ஆவி குமார்’ படத்தைப் பார்த்து காப்பியடித்தார்கள் என்ற பேச்சு கூட கிளம்பியிருக்கும்.
சில மாதங்களுக்கு முன்பே வர வேண்டிய ‘ஆவி குமார்’ படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.
படத்தின் விளம்பரங்களில் தன்னை முன்னிலைப்படுத்தாமல் இருப்பதைப் பற்றி வருத்தப்பட்டாலும், தயாரிப்பாளர்களின் முடிவுக்கே அதை விட்டுவிடுகிறேன் என பெருந்தன்மையாகப் பேசுகிறார் படத்தின் நாயகன் உதயா.
“இந்தக் காலத்தில் ஒரு படத்தை எடுத்து முடித்து வெளியிடுவதற்குள் ஒரு தயாரிப்பாளர் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது என்பது ஒரு தயாரிப்பாளரின் மகனாக எனக்கு நன்றாகவே தெரியும்.
இந்தப் படத்தை பேய்ப் படமாக விளம்பரப்படுத்த வேண்டும் என்பதற்காக விளம்பரங்களில் படத்தின் நாயகிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இருந்தாலும் அதை நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை. என்னுடைய தயாரிப்பாளர்களை மிகவும் மதிக்கிறேன்.
இந்த ‘ஆவி குமார்’ படம் 80 சதவீதம் மலேசியாவில் எடுக்கப்பட்ட ஒரு படம். ஆவிகளுடன் பேசுவதால் எனக்கு யாரும் பெண் தர மறுக்கிறார்கள். அதனால், அதை விட்டுவிடுதவற்கு முடிவ செய்கிறேன். மலேசியாவிற்கு ஒரு வேலையாகச் செல்லும் நான், அதன் பின் ஆவிகளுடன் பேசுவதை விட்டுவிட முடிவு செய்கிறேன்.
ஆனால், அங்கு எனக்கு வேறு விதமான அனுபவம் கிடைக்கிறது. அது என்ன, என்பதை மிகவும் நகைச்சுவையாகவும், த்ரில்லிங்காகவும் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறோம். கிளைமாக்சுக்கு முன்னதாக கடைசி அரை மணி நேரம் எதிர்பார்க்க முடியாதபடி பரபரப்பாக இருக்கும். நிச்சயம் இந்தப் படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,” என்றார்.
சினிமாவிற்கு வந்து 15 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இதுவரை 9 படங்கள் மட்டுமே நான் நடித்து வெளி வந்துள்ளன. எப்போதோ வெளிவந்திருக்க வேண்டிய ‘காதல் சாதி, ஆசாமி, கோட்சே’ ஆகிய படங்கள் வெளிவந்திருந்தால் நானும் தமிழ்த் திரையுலகத்தில் முக்கியமான ஹீரோவாக மாறியிருப்பேன்.
இளையராஜா இசையமைத்த ‘காதல் சாதி’ படத்தின் பாடல்கள் வெளிவந்த போது சுமார் 15 லட்சம் கேசட்டுகள் விற்றது. ஒரு ஆடு மேய்க்கும் பையனுக்கும், மாடு மேய்க்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல் கதை அது. பிரகாஷ்ராஜ் வில்லனாகவும், நந்திதா நாயகியாகவும் நடிக்க கஸ்தூரிராஜா இயக்கியிருந்தார். அந்தப் படம் மட்டும் வெளிவந்திருந்தால் எனக்கு மிகவும் திருப்புமுனையாக இருந்திருக்கும்,” என ஆதங்கத்துடன் பேசுகிறார் உதயா.
பொறுமையாகக் காத்திருப்பதன் பலன் சினிமாவில் கண்டிப்பாகக் கிடைக்கும் என உறுதியிடன் பேசுகிறார்.
‘ஆவி குமார்’ ஆர்பாட்டமான வெற்றி பெறட்டும்…