இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கூடிய விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் புலி. நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் மகாபலிபுரத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், நந்திதா, தம்பி ராமைய்யா உட்பட படக்குவினரும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
சிறப்பு விருந்தினர்களாக விஜய்யை வைத்து படம் இயக்கிய பல இயக்குநர்கள் கலந்து கொண்டார்கள். நேற்று உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டதை தொடர்ந்து தனது பழைய இயக்குநர் நண்பர்களை மறக்காமல் புலி இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்ததுதான் அதற்குக் காரணம்.
விழாவில் பேசிய நடிகர் விஜய்,
“ரொம்ப நாளாகவே எனக்கு ஒரு சரித்திரப் படத்தில் நடிக்கணும்னு ஆசை இருந்துட்டேயிருந்துச்சு. அந்த நேரத்துல இயக்குநர் சிம்புதேவன் என் கிட்ட இந்தக் கதையை கொண்டு வந்தாரு.
நாம உயிரோட இருக்குற வரைக்கும் அடுத்தவங்களுக்கு தீமை செய்யாமல் இருந்தாலே போதும், எனக்கு யாரையும் உண்மையாக வெறுக்கத் தெரியுமே தவிர பொய்யாக நேசிக்க தெரியாது.
இன்னைக்கு இருக்குற ஹிரோக்களிடம் அண்ணனாக பழகிக் கொண்டிருப்பவர் பிரபு சார், அதேமாதிரி ஒரு ஹீரோ இன்னொரு ஹீரோ படத்துல வில்லனாக நடிக்க ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனா கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் சார் இதுக்கு ஒத்துக்கிட்டாரு. அவருடைய பெருந்தன்மைக்கு என்னுடைய நன்றி. அடுத்து ஹீரோ நட்டி சார், ஹிரோவாக ‘சதுரங்க வேட்டை’ ஆடினாரு, இப்ப கேமரா மூலமாக புலி வேட்டை ஆடியிருக்கிறார். கடைசியாக நம்ம ஊர் சிவகாசி பட்டாசு ஸ்ரீதேவி மேடம் அவர்களுக்கும் பெரிய நன்றி.
அடுத்து ஒருத்தரை பற்றி நான் சொல்லியே ஆகனும், அவரை நான் சந்திக்கும்போதெல்லாம் எப்பவுமே ஒரு எனர்ஜி அவர் கிட்ட தெரியும், அதை பார்த்து நான் வியந்திருக்கிறேன். இப்ப இந்த படத்துல தாரை தப்பட்டையெல்லாம் வச்சு புலியை விரட்டுவாங்க, ஆனா இப்ப தாரை தப்பட்டையெல்லாம் வைத்து புலியை ஆட வச்சிருக்காரு தேவிஸ்ரீபிரசாத், அவருக்கு என் நன்றி மற்றும் பிறந்த நாள் வாழ்த்துகள்.
எனக்கு என் ரசிகர்களுக்கு மற்றவர்களை வாழ வச்சு அழகு பார்க்குறதுதான் பிடிக்கும், மேலும் இந்த விழாவுக்கு வந்த அனைவருக்கு நன்றி. இவ்வளவு தூரம் வந்து வாழ்த்தியதற்கும் முக்கியமாக டி.ஆர் சாருக்கு என் நன்றி,” என்றார் விஜய்.