ஜே ஸ்டூடியோஸ் மற்றும் சிட்ஸன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்க, புதுமுக இயக்குனர் சிவகார்த்திகேயன் இயக்கும் படம் ‘ரீங்காரம்’. இவர் ‘அரசு’ சுரேஷ், சமுத்திரக்கனி, மூர்த்தி, C.J.பாஸ்கர் ஆகியோரிடம் பணியாற்றியவர். இனியன் ஹரீஸ் ஒளிப்பதிவு செய்ய, அலி மெர்சா இசையமைக்கிறார்.
புதுமுகம் பாலா கதாநாயகனாக நடிக்கிறார். ‘கங்காரு, வந்தா மல’ படங்களில் நடித்த பிரியங்கா ஹீரோயினாகவும், கலாபவன்மணி, ஆடுகளம் ஜெயபாலன், சிந்தியா, சிங்கப்பூர் தீபன், தயாரிப்பாளர் ஜின்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் சிவகார்த்திகேயன் கூறியதாவது,
ஒவ்வொரு மனிதனைச் சுற்றியும் ஒரு ரீங்காரம் இருக்கு. அவரவர் எண்ண அலைகளைத்தான் ரீங்காரம் என்கிறோம். மனசுக்குள்ள சந்தோஷப்படுகிற மாதிரியான நகைச்சுவையும், அடி மனசு வலிக்கிற மாதிரியான நிகழ்வுகளும், பார்த்துக்கிட்டே இருக்கணும்னு நினைக்கிற அழகும், மறக்கவே முடியாத அமைதியும், கலையா மதிக்கிற காதலும் சரிவர கலந்து திரைக்கதையை மட்டுமே முழுமையா நம்பி பின்னப்பட்ட கதை ரீங்காரம்.
26 நாள்ல முழுப் படப்பிடிப்பையும் முடிச்சிட்டோம், இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. கதாநாயகனுக்கு 6 மாதம் நடிப்பு பயிற்சி கொடுத்தோம். படம் முழுவதுமே வசன மொழி குறைவு, உடல் மொழி அதிகம், அதுக்காக அவரைத் தயார் செய்ய ஆறு மாசமாச்சு.
லெக்கின்ஸ் காலத்தில் கவர்ச்சியே இல்லாம படம் செய்வது மிகப் பெரிய சவால். ஆனால் நாங்க சென்சாருக்கு வேலையே இல்லாமல் அப்படியொரு படம் பண்ணிருக்கோம்ங்கிறது மிகப்பெரிய சந்தோஷம்.
வாழ்க்கை நாம தயாரிக்கிற அட்டவணைக்குள்ள எப்பவுமே அடங்கறதில்ல. அது போடுற அட்டவணைக்குள்ளதான் நம்மள அடக்கும். அது கூட்டிப் போற திசையை யாராலும் யூகிக்க முடியாது. அந்த யூகிக்க முடியாத திசையோட ஒரு பக்கம்தான் ரீங்காரம், வெற்றிக்கான அங்கீகாரமாக மக்கள் ரசிப்பார்கள் என நம்புகிறேன்,” என்கிறார் சிவகார்த்திகேயன்.