ரஜினிகாந்த்தைப் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், கலையரசன் யார் என்று சொன்னால் சிறு அறிமுகம் தேவைப்படும்.
‘மெட்ராஸ்’ படத்தில் கார்த்தியின் நண்பராக மிகவும் யதார்த்தமாக நடித்திருந்தாரே அவர்தான் கலையரசன். தற்போது ‘உறுமீன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
பா.ரஞ்சித் இயக்க உள்ள ‘கபாலி’ படத்தில் கலையரசனும் நடிக்கிறார். இன்று ‘கபாலி’ படத்திற்கான ஃபோட்டோ ஷுட்டி சென்னையில் நடந்தது. அப்போது ரஜினிகாந்தை கலையரசன் சந்தித்திருக்கிறார்.
அது பற்றி அவர் கூறுகையில், “ஒரே ஒரு சூப்பர் ஸ்டாரான தலைவரை இன்று சந்தித்தேன். மிகப் பெரிய நாள். உண்மையாகவே மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன், ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை. லவ் யு தலைவா…
தலைவர் என் பெயரைச் சொன்னார். அந்த ‘ஷாக்’கிலிருந்து இன்னும் மீண்டு வரவில்லை, பறந்து கொண்டிருக்கிறேன்,” என மகிழ்ச்சிக் கடலில் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார் கலையரசன்.