பத்து வருடங்களுக்கு முன்பாக தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர் சிம்ரன். தன் நடிப்பாலும், நடனத்தாலும் ரசிகர்களை கட்டிப் போட்டவர். அஜித், விஜய், சூர்யா போன்றோருடன் பல வெற்றிப் படங்களில் நடித்தவர்.
அதன் பின் தீபக் பாகாவைத் திருமணம் செய்து கொண்டு திரையுலகத்தை விட்டு விலகியிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் நடித்தார். சமீபத்தில் வெளிவந்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்திலும் நடித்திருந்தார்.
நடிகை சிம்ரனின் கணவரும், சின்னத்திரையில் வெற்றிகரமான நிகழ்ச்சி தயாரிப்பாளருமான தீபக் பாகா, வெள்ளித் திரையில் தனது வெற்றிப்பயணத்தை தொடங்கியுள்ளார். இதற்காக “சிம்ரன் & சன்ஸ்” (Simran & Sons) என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். முதல்படத்தின் தயாரிப்பு வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார்.
பல முன்னணி நிறுவனங்களுக்கு பிரபல நட்சத்திரங்களை வைத்து எண்ணற்ற விளம்பரப்படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட கெளரி சங்கர் என்பவரை இயக்குனராக அறிமுகப்படுத்த உள்ளார். இவர் இயக்க உள்ள பெயரிடப்படாத இந்த புதிய படத்தில் நடிகை சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.
இது பற்றி தீபக் பாகா கூறியதாவது, “திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்து பின்னர் என்னுடன் திருமண பந்தத்தில் இணைந்த சிம்ரன், எனது முதல் தயாரிப்பான புதியபடத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.
புதிய படத்தின் பெயர், மற்ற நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறோம்,” என்றார்.