‘புலி’ படத்தைத் தயாரித்த பி.டி.செல்வகுமார் வழங்க பிடிஎஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக டி.எஸ். பொன்செல்வி தயாரிக்கும் படம் ‘போக்கிரி ராஜா’.
‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தை இயக்கி ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா, அறிமுக நடிகை மானஸா, முனீஸ் காந்த், மனோபாலா, மயில்சாமி, யோகி பாபு, சுஜாதா மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.
ராம்கோபால் வர்மாவுடன் பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய ஆஞ்சநேயலு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. விரைவில் அவை முடிவடைந்து தொடர்ந்து பின் பணி வேலைகள் நடைபெற உள்ளன.
சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக துப்புரவு பணிகளைச் செய்த 100 பணியாளர்களுக்கு, புத்தாண்டை முன்னிட்டு, அவர்களுக்கு அரிசி, வேட்டி, சேலை ஆகியவற்றைக் கொடுத்து ‘போக்கிரி ராஜா’ குழுவினர் உதவி செய்தனர்.
நேற்று படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா, நாயகர்கள் ஜீவா, சிபிராஜ், நாயகி ஹன்சிகா, ஒளிப்பதிவாளர் ஆஞ்சநேயலு அந்த உதவிகளை வழங்கினர்.
ஒரு சிலருக்கு மட்டும் கொடுத்து புகைப்படத்திற்கு ‘போஸ்’ கொடுக்காமல் அந்த 100 பேருக்கும் விமானத்தை பிடிக்கும் அவசரத்திலும், ஹன்சிகா தனது கைகளால் கொடுத்ததை படக் குழுவினரும், வாங்கியவர்களும், சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்களும் ஆச்சரியமாகப் பார்த்தனர்.
ஹன்சிகா என்றால் சும்மாவா, சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தன் சார்பாக 15 லட்ச ரூபாய் கொடுத்தவர் ஆயிற்றே…நேற்று கொடுத்தது சிறு உதவிதான் என்றாலும் வாங்கிய கைகள் ஹன்சிகாவையும் மனமுவந்து வாழ்த்தியது.