‘பசங்க 2’ படத்தின் வெற்றிக்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கியுள்ள அடுத்த படமான ‘கதகளி’ படம் வரும் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
மாறுபட்ட படங்களை இயக்கி வரும் பாண்டிராஜும், வித்தியாசமான ஆக்ஷன் படங்களில் நடித்து வரும் விஷாலும் இணைந்துள்ள இந்த ‘கதகளி’, மாறுபட்ட ஆக்ஷன் படமாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
‘பாண்டிய நாடு’ படத்திற்குப் பிறகு விஷாலுக்கு மீண்டும் ஒரு பேர் சொல்லும் படமாக இந்தப் படம் அமையலாம். இந்தப் படம் ஒரு சிறப்பான படம் என்கிறார் விஷால்.
“இது மிகவும் சிறப்பான கதை. என்னுடைய படங்களில் இரண்டாம் பாதியில் பாடல்கள் இல்லாமல் வருவது இது தான் முதல் முறை.
படத்தில் இடம் பெறும் சண்டைக் காட்சிகள் அனைத்துக்கும் ஒரு காரணமும் , லீடும் இருக்கும். படத்தில் மொபைல் போனுக்கு முக்கிய பங்கு உண்டு.
படத்துக்கு இசையமைப்பாளர் ஆதி மிகச்சிறப்பாக இசையமைத்துள்ளார். படத்தில் அவருடைய பின்னணி இசை பெரிதும் பேசப்படும் விஷயமாக இருக்கும்.
ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் மிகச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார். கேத்ரீன் தெரேசா நடிப்பும் நிச்சயம் பேசப்படும்.
என்னைப் பொறுத்தவரை பொங்கலுக்கு வெளியாகும் அனைத்துத் திரைப்படங்களும் வெற்றி பெற வேண்டும். நான் அனைவருக்காகவும் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன், என்னுடைய படத்துக்காக இன்னும் அதிகமாக வேண்டிக் கொள்கிறேன்,” என்கிறார் விஷால்.