விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த ‘நினைத்தது யாரோ’ படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ரஜித்மேனன்.
இவர் ‘அன்பென்றாலே அம்மா’ என்ற இசை வீடியோ ஆல்பம் ஒன்றை இயக்கி உள்ளார். ஒரு அம்மாவின் பாசத்தைப் பற்றி வெளிப்படுத்தக் கூடிய ஒரு ஏழு நிமிடப் பாடலாக அந்த ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ ஆல்பத்தில் ஜரீனா வஹாப் அம்மாவாக நடித்திருக்கிறார். மற்றும் ஜிகினா படநாயகன் ஆன்சன், உலக புகழ்பெற்ற மாடல் அழகி ஸ்ருதி மற்றும் ஏராளமான குழந்தைகளும் நடித்துள்ளனர்.
ஜரீனா வஹாப் எம்.ஜி.ஆருடன் ‘நவரத்தினம்’ படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர். அத்துடன் கமலுடன் ‘விஸ்வரூபம்’, சூர்யாவுடன் ‘ரத்த சரித்திரம்’ போன்ற படங்களில் நடித்தவர்.
இந்த இசை வீடியோ ஆல்பத்தில் நடித்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று ஜரீனா வஹாப் கூறி உள்ளார்.
கார், பங்களா, நகை, பணம் என்று எதுவுமே எந்த தாய்க்கும் சந்தோஷத்தை ஏற்படுத்தி விடாது. மகன், மகள்களின் அன்புக்கு இது எதுவுமே ஈடாகாது. என்கிற உயரிய கருத்தை இதில் சொல்லியிருக்கிறோம். எல்லோருக்குமே அம்மா என்றால் மிகவும் பிடிக்கும் அந்தப் பாசத்திற்கு ஈடு இணை எதுவுமில்லை. இந்த இசை வீடியோ ஆல்பத்தைப் பார்த்த பின் யாராவது ஒருவர் முதியோர் இல்லத்தில் உள்ள அவர்களது அம்மாவையோ, அல்லது அப்பாவையோ மீண்டும் அவர்களது வீட்டுக்கே அழைத்து வந்தால் அதுவே எங்களுக்குக் கிடைத்த வெற்றி,” என்கிறார் ஆல்பத்தை இயக்கியுள்ள ரஜித் மேனன்.
மலையா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாராகியுள்ள இந்த ஆல்பத்திற்கு ரஞ்சித் உன்னி இசை அமைத்துள்ளார். சாரதி பாடலை எழுத ஸ்வேதா மோகன் பாடியுள்ளார்.
டைம்ஸ் மியூசிக் இன்று இந்த வீடியோ இசை ஆல்பத்தை வெளியிடுகிறது.