ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’, அஜித்குமார் நடித்த ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்களும் கடந்த வாரம் ஜனவரி 10ம் தேதி வெளியாகின.
ஒரே நாளில் வெளியானதால் இரண்டு படங்களின் வசூலுக்கும் கடுமையான போட்டி இருந்தது.
சமூக வலைத்தளங்களில் தங்களை டிராக்கர்கள் என அழைத்துக் கொள்ளும் சிலர், இரண்டு படங்களைப் பற்றியும் பலவிதமான வசூல் தகவல்களை வெளியிட்டு வந்தார்கள்.
அது பற்றி ‘பேட்ட’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், தமிழ்நாட்டில் 600க்கும் கூடுதலான தியேட்டர்களில் படத்தை வெளியிட்ட எங்களுக்கே இன்னும் படத்தின் வசூல் பற்றி எந்தவிதத் தகவலும் வரவில்லை. உங்களுக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் வருகிறது என கண்டனம் தெரிவித்திருந்தார்கள்.
அதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ‘பேட்ட, விஸ்வாசம்’ இரண்டு படங்களின் ஆதரவாளர்களுக்கும் இடையே வார்த்தை மோதல்கள் அதிகமானது.
இந்நிலையில் ‘பேட்ட’ படத்தை வெளிநாடுகளில் வெளியிட்ட மலேசியாவைச் சேர்ந்த மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் வெளிநாடுகளில் ‘பேட்ட’ படம் 65 கோடி ரூபாய் வசூலைத் தொட்டிருக்கிறது என்ற தகவலை அறிவித்திருக்கிறார்கள்.
இது குறித்து மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கம்பெனியின் உரிமையாளர் மாலிக் வெளியிட்டுள்ள வீடியோவில்,
“பேட்ட’ படம் நல்ல வசூலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. எல்லா வினியோகஸ்தர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இன்று வரை இந்தப் படத்தின் வெளிநாடு வசூல் 65 கோடி வரை ஆகியிருக்கிறது. இது இந்தியாவைத் தவிர இது வசூல். இந்த வசூல் இன்னும் அதிகமாகும். அது பற்றி பின்னர் தெரிவிக்கிறோம்,” எனக் கூறியுள்ளார்.
International BO report from International distributor of #Petta @Malikstreams stating #Petta has collected 65 crores till date Worldwide except India.#PettaWorldWideBB pic.twitter.com/lyDHzvDaVy
— Sun Pictures (@sunpictures) January 17, 2019