ஜீவாவை மாற்றிய ‘திருநாள்’…

கோதண்டபாணி பிலிம்ஸ் சார்பாக எம்.செந்தில்குமார் தயாரிக்க ஸ்ரீ இசையமைப்பில், ஜீவா, நயன்தாரா நடித்துள்ள ‘திருநாள்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இயக்குனர் ராம்நாத், இசையமைப்பாளர் ஸ்ரீ, தயாரிப்பாளர் செந்தில்குமார், நாயகன் ஜீவா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா பேசும்போது

” இன்று ஒரு நல்ல நாள். இந்தத் திருநாளில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது ஒரு பாசிட்டிவான டீம். நல்ல எண்ணம் கொண்ட நண்பர்கள் கொண்ட படக் குழு. இந்தப் படத்தின் கதையை நீண்டநாட்கள் முன்பே கேட்டேன்.

பிறகு தயாரிப்பாளராக செந்தில்குமார் அமைந்தார். அவர் வெறும் தயாரிப்பாளர் அல்ல, எங்கள் குடும்ப நண்பர். சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் ‘சூர்யவம்சம், திருப்பாச்சி’ போன்ற பல வெற்றிப் படங்களுக்குப் பின்புலமாக இருந்தவர்.

அவர்தான் படத்தைத் தயாரிப்பது என்று முடிவானதும் உடனே படப்பிடிப்புக்குப் புறப்பட்டு விட்டோம். ஒரே மூச்சில் படத்தை முடித்தோம்.

பொதுவாகப் படப்பிடிப்பில் எல்லாம் தினம் ஒரு பிரச்சினை வரும். படப்பிடிப்பில் ஒரு நடிகனுக்கு பிரச்சினை வரக்கூடாது. எந்தப் பிரச்சினையும் வராமல் இருந்தால்தான் நிம்மதியாக நன்றாக நடிக்க முடியும்.
இப்படத்தில் அப்படி எதுவும் தெரியவே இல்லை. நாங்கள் நிம்மதியாக இருந்தோம். எல்லாவற்றையும் செந்தில்குமார் பார்த்துக் கொள்வார், அவர் பார்க்காத பிரச்சினையா ?அப்படிப்பட்ட அனுபவசாலி அவர்.

படத்தின் இயக்குநர் ராம்நாத் திட்டமிட்டு எடுப்பவர் எல்லாவற்றிலும் தெளிவாக இருப்பவர். இந்தப் படம் முழுக்க வேட்டியில்தான் வருகிறேன். நீண்டநாட்களாகவே லோக்கலாக இறங்கி படம் பண்ணவில்லை என்று என்னைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படி லோக்கலாக அமைந்த படம்தான் ‘திருநாள்’.

ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி சத்தம் போட்டுப் பேசி நான் பார்த்ததில்லை, பதற்றமாகி நான் பார்த்ததில்லை. அவருடன் 100 படங்கள் கூட வேலை பார்க்கலாம். கலை இயக்குநர் சீனு ராவ் கடினமான உழைப்பாளி. இசையமைப்பாளர் ஸ்ரீ அழகழகான பாடல்களைக் கொடுத்திருக்கிறார். “ஈ, தெனாவட்டு’ படங்களுக்குப் பிறகு அவருடன் இதில் வேலை பார்த்தது மகிழ்ச்சி. முதலில் இந்தப் பாடல்களைக் கேட்டு விட்டு அதிர்ச்சி அடைந்தேன். ஸ்ரீ எப்போதும் குத்துப் பாட்டுதான் போடுவார் என்று நினைத்தேன். ஆனால் இப்படத்திற்காக இனிமையான மெலடி பாடல்களையும் போட்டுள்ளார்.

நயன்தாராவுடன் 9 ஆண்டுகளுக்குப் பின் நடித்திருக்கிறேன். படத்தில் முதலிலேயே அவரைத்தான் நடிக்க வைக்க நினைத்தோம். ஆனால் அப்போது அவர் பிஸியாக இருந்தார். பிறகு வேறு நடிகைகள் எல்லாம் பார்த்தோம், சரிப்பட்டு வரவில்லை. ஆனால் தாமதமானாலும் நயன்தாராதான் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது.

பிறகு அவரே வந்து சேர்ந்துவிட்டார். முதல்நாள் படப்பிடிப்பு முதல் கடைசிநாள் படப்பிடிப்பு வரை இயக்குநர் சொன்னதை மட்டும்தான் ஆர்வமாகச் செய்தேன். இப்படத்தில் விருப்பமாக நடித்தேன், சுதந்திரமாக நடித்தேன். பிளேடு வாயில் வைப்பது போன்ற பல காட்சிகளில் சிரமப்பட்டு நடித்தேன். இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக இருக்கும்,” என்றார் ஜீவா.

இசையமைப்பாளர் ஸ்ரீ பேசும் போது

” என்னைக் குத்துப்பாட்டு இசையமைப்பாளர் என்பார்கள். இதில் ‘உருமாறிய கருமாரி’ போல முழுக்க முழுக்க மாறி இருக்கிறேன். நாலு இனிமையான பாடல்கள் போட்டு இருக்கிறேன் .கங்கை அமரன், டி.இமான் போன்ற இசையமைப்பாளர்கள் பாடியிருக்கிறார்கள். எஸ். ஜானகியம்மா பாடியிருக்கிறார். அது என் நீண்டநாள் கனவு ”என்றார்.

இயக்குநர் பி.எஸ்.ராம்நாத் பேசும் போது

“அம்பாசமுத்திரம் அம்பானி’ என் முதல் படம். இது என் இரண்டாவது படம். ‘திருநாள்’ படத்தின் முழுக் கதையையும் பைண்ட் செய்து 5 ஆண்டுகளாகத் தயாரிப்பாளரைத் தேடினேன், ஆனால், தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. தயாரிப்பாளர் செந்தில்குமார் சார் இரண்டே கால் மணி நேரம் கதை கேட்டார். மறுநாளே ஜீவாவும் இரண்டே கால் மணிநேரம் கதை கேட்டார். உடனே ஓகே சொன்னார். நயன்தாராவும் முழுக் கதையும் கேட்டார்.

இது கும்பகோணத்தின் பின்னணியில் நடக்கும் ரவுடியிசம் சார்ந்த கதை. இதற்காக ஜீவாவை அவர் நடித்த கடந்த 25 படங்களில் அவர் செய்யாத நடை, உடை, பாவனை, தலைமுடி, சட்டை, நிறம், வேட்டி என எல்லாமும் மாற்றினோம். இதில் நயன்தாரா, பள்ளி ஆசிரியையாக வருகிறார். ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி எனக்கு பக்கபலமாக இருந்தார். இது மாதிரி படம் தொடங்கியது முதல் படம் முடியும் வரை அதே உற்சாகத்துடன், பலத்துடன் இருக்கும்படியான ஒரு தயாரிப்பாளர் கிடைப்பது சிரமம்,” என்றார்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் எம். செந்தில்குமார் ,ஒளிப்பதிவாளர் மகேஷ்முத்துசாமி, பாடலாசிரியர் ஜீவன்மயில், கலை இயக்குநர் சீனுராவ், நடன இயக்குநர் பாலகுமார் ஆகியோரும் பேசினார்கள்.

Read Previous

More about Dhanush & Thodari

Read Next

காளி வெங்கட் பாடும் ‘காலிஃபிளவர்’ பாடல்…

Most Popular