தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்திற்காக புதிய கட்டிடம் கட்ட நிதி திரட்டும் வகையில் வரும் 17ம் தேதி அனைத்து முன்னணி நடிகர்களும் கலந்து கொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்த நடிகர் சங்கம் திட்டமிட்டுள்ளது. ஆனால், அஜித் அதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும், மக்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவித்ததாக சிலர் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். இருந்தாலும், அஜித்திடமிருந்து அப்படி ஒரு அதிகாரப்பூர்வமான அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
அஜித் ரசிகர்கள் அப்படி ஒரு செய்தியைப் பரப்பி வருவதும், ஸ்டார் கிரிக்கெட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். இது நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களிடமும் கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
அஜித் ஸ்டார் கிரிக்கெட்டுக்கு வரவில்லை என்றாலும், இப்படி செய்தி பரப்பி வரும் ரசிகர்களிடம் அம்மாதிரி செய்ய வேண்டாம் என இதுவரை எந்த கண்டிப்பையும் காட்டாததையும் சிலர் சுட்டிக் காட்டுகிறார்கள்.
எம்ஜிஆர், சிவாஜி காலத்திலிருந்தே இப்படி நன்கொடை திரட்டுவது வழக்கமா இருக்கும் ஒன்றுதான். ‘கார்கில்’ போன்ற விஷயங்களில் கூட நடிகர்கள் பலரும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டியதையும் அவர்கள் நினைவு கூர்கிறார்கள். வெள்ள சமயத்தில் கூட பல நடிகர்கள் களத்தில் இறங்கி நிவாரணம் செய்த போது, அஜித் தரப்பிலிருந்து நேரடியாக எந்த ஒரு நிவாரணமும் நடிகர் சங்கத்துக்கு வழங்கப்படவில்லை. முதல்வர் நிவாரண நிதிக்கும் தரப்படவில்லை. ஆனால், அஜித் ரசிகர்கள் நடிகர் சங்கத்தினர் எதுவும் செய்யாதது போன்ற ஒரு தவறான தகவலைப் பரப்பி வருகிறார்கள் என்றும் நடிகர் சங்க வட்டாரங்களில் வேதனை எதிரொலிக்கிறது.
அதற்கும் மேல் சினிமா வட்டாரங்களில் ஒரு தகவலைக் கூறுகிறார்கள். ‘வேதாளம்’ படம் வந்த போது ஒரு வாரம் வரை பல திரையரங்குகளில் டிக்கெட் விலை 500 ரூபாய் வரை விற்கப்பட்டது. அப்படி விற்றுத்தான் அந்தப் படத்திற்கு அமோக வசூலை அள்ளினார்கள். அப்போது மட்டும் ஏழை ரசிகர்கள் மீது அஜித்தின் பாசம் எங்கே போனது என்கிறார்கள்.
இதற்கெல்லாம் அஜித் பதில் சொல்வாரா ? அல்லது வழக்கம் போல் மௌனம் காப்பாரா ?