ஒருவர் மட்டுமே நடிக்கும் ‘மற்றொருவன்’

மரியா பிலிம் கம்பெனி சார்பில் வேல்முருகன், கே. எம். செபஸ்டின், திருப்பூர் மோகன் தயாரித்துள்ள படம் ‘மற்றொருவன்’.

மஜோ மேத்யூ இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரியாஸ்கான் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

இது வழக்கமான தமிழ்த் திரைப்படம் அல்ல. இந்தப் படத்தில் ஒரே ஒருவர் மட்டுமே நடித்திருக்கிறார். அதாவது, படத்தில் ரியாஸ்கான் மட்டுமே நடித்துள்ளார். அவர் ஒருவரை வைத்தே இரண்டரை மணி நேர படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான வேல் முருகன் ‘நேசம்புதுசு’ என்ற படத்தை இயக்கியவர். ஏ.ஜகந்நாதன், என்.கே. விஸ்வநாதன், டி.பி கஜேந்திரன், சுந்தர்.சி, சீமான் போன்ற இயக்குநர்களிடம் உதவி இயக்குநர், கதை விவாதம் என்று பணியாற்றியவர்.

சேரனின் ‘ஆட்டோகிராப்’ படத்தில் நடிகராகி 80 படங்களில் நடித்திருப்பவர். ‘எவன்டி உன்ன பெத்தான்’ என்கிற பெயரில் ஒரு படமும் இயக்கி முடித்திருக்கிறார். அவருக்கு நடிகர் ஜே.கே. ரித்திஷ் மூலம் திருப்பூர் மோகன் என்பவரின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அவர் மூலம் செபஸ்டின், இயக்குநர் மஜோ அறிமுகமாகியிருக்கிறார்கள்.

தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்த வேல்முருகனை இயக்குநர் சொன்ன கதை உலுக்கி உசுப்பி விடவே படத்தை நண்பர்களுடன் சேர்ந்து தயாரிப்பது என்று முடிவாகியது.

உற்சாகமாக களத்தில் இறங்கி படத்தை முடித்து இருக்கிறார்கள். இது பற்றி தயாரிப்பாளர் வேல்முருகன் கூறும் போது.” கதைதான் என்னைத் தயாரிப்பாளராக்கி இருக்கிறது. அதற்காக எந்த அபாயத்திலும் இறங்கலாம் என்கிற துணிச்சலையும் தந்தது,”என்கிறார்.

படத்தின் கதை பற்றி இயக்குநர் மஜோ மேத்யூ கூறும் போது, “இது உளவியல் சார்ந்த கதை. ஆனாலும் எல்லாருக்கும் புரிகிற மாதிரியான முழுமையான கமர்ஷியல் படம்தான் இது. நாயகன் ஒவ்வொரு விஷயத்தையும் கனவு காண்பான். கனவில் காண்பது எல்லாம் நேரில் நிஜத்தில் ஒவ்வொன்றாக நடக்கிறது. ஒரு பெரிய கனவு காண்கிறான். அது நிஜமாகிறதா என்பதே க்ளைமாக்ஸ் .

நாயகனுக்கு கண்ணுக்குத் தெரியாத எதிரி இருக்கிறான். அவனைப் பார்க்க முடியாது, நிழலாகவே அறிய முடிகிறது. அது யார்? என்பது சஸ்பென்ஸ். படத்தில் அந்த ஒரு நாயகனாக ரியாஸ்கான் நடித்துள்ளார். அவர் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் பாத்திரம் அவருக்கு ஒரு சவாலாக இருந்தது என்பேன். எதிர்பார்த்தபடி நடித்து அசத்தியும் இருக்கிறார்,” என்கிறார் இயக்குனர்.

படம் முழுக்க நிழலாக வரும் நிழல் பாத்திரம் யார் ? அந்த’ மற்றொருவன்’ யார் என்பது சஸ்பென்ஸ். அந்த நிழல் எதிரியா? பேயா? கற்பனையா? மனப் பிரமையா ? என்பதை ஊகிக்கவே முடியாது.

பட அனுபவம் பற்றி நாயகன் ரியாஸ்கான் பேசும்போது

“நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று நடித்து ஜப்பான் மொழி வரை 300 படங்கள் நடித்திருக்கிறேன். இவற்றில் எந்தப் படத்திலும் வராத வித்தியாசமான வாய்ப்பு இந்தப் படத்தில் கிடைத்தது. பத்து படத்தில் நடித்த அனுபவம் இந்த ஒரே படத்தில் கிடைத்தது. படப்பிடிப்பில் ஒரு நிமிடம் கூட உட்கார முடியவில்லை. சவாலும் நடிக்க நல்ல வாய்ப்பும் நிறைந்த பாத்திரம் இது. என்மேல் நம்பிக்கை வைத்து வழங்கப்பட்டதை என்னால் முடிந்தவரை சிறப்பாகச் செய்திருக்கிறேன்,” என்கிறார்.

ஒரே ஒரு நாயகன் பாத்திரம் தவிர உயிருள்ள இரண்டு பாத்திரங்களாக ஒரு நாயும் யானையும் மட்டும்தான் படத்தில் நடித்துள்ளன. இருந்தாலும் இந்த 1 மணி 50 நிமிடக் கதை பரபரப்பும் விறுவிறுப்புமாக கமர்ஷியல் பார்முலாவில் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை, ஹைதராபாத், மூணார் என பயணித்து 45 நாட்களில் படத்தை முடித்திருக்கிறார்கள். ஏவி எம் ஸ்டுடியோவில் ஒரு செட் போட்டும் படமாகியுள்ளது.

தொழில்நுட்ப ரீதியாகவும் பல புதுமைகள் கொண்ட படமாகவும் ‘மற்றொருவன்’ படம் உருவாகியுள்ளது.

மலையாளத்தில் 500 படங்களில் பணியாற்றிய பென்னி ஜான் இசையமைத்துள்ளார். படத்தில் உள்ள இரண்டே இரண்டு பாடல்களை கல்பாக்கம் சுகுமார் எழுதியுள்ளார்.

ஒளிப்பதிவு – நிகில், கலை இயக்கம்- லக்ஷ்மன், ஸ்டண்ட்– மாபியா சசி, வசனம்– வேல் முருகன்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் நேரடிப் படமாக உருவாகியுள்ளது ‘மற்றொருவன்’. ஒரு முழு நீள ஹாரர் படமான இது, மே மாதம் வெளியாகிறது.

Read Previous

உலக அளவில் படம் எடுக்க வேண்டும் – கங்கை அமரன்

Read Next

Uriyadi – Official Trailer

Most Popular