சேரன் நாயகனாக நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’

இயக்குநர் சேரன் மீண்டும் நடிப்பு, இயக்கம் என சுறுசுறுவென தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். ஒரு பக்கம் ‘திருமணம்’ படத்தை இயக்கி நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் ‘ராஜாவுக்கு செக்’ படத்திலும் நடித்து முடித்துவிட்டார்.

‘ராஜாவுக்கு செக்’ படம் எமோஷனல் திரில்லராக புதுவிதமான சேரனைக் காட்டும் படமாகத் தயாராகியுள்ளது என்கிறார்கள் படக்குழுவினர்.

இந்த படத்தை சாய் ராஜ்குமார் இயக்கியுள்ளார். பெயர் புதிது போல் தோன்றினாலும், ஏற்கனவே ’ஜெயம்’ ரவியை வைத்து தமிழில் ’மழை’ என்கிற படத்தை இயக்கிய அதே ராஜ்குமார் தான் இவர்.

கொஞ்ச காலம் தெலுங்குத் திரையுலகம் பக்கம் சென்றுவிட்டு தற்போது சாய் ராஜ்குமார் ஆக மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார்.

படம் பற்றி இயக்குனர் சாய் ராஜ்குமார் கூறியதாவது,

“ராஜாவுக்கு செக்’’ படத்தின் கதையை உருவாக்கி முடித்ததுமே இதில் யார் நடித்தால் சரியாக இருக்கும் என்கிற கேள்வி எழுந்தபோது முதல் ஆளாக என் மனதில் தோன்றியவர் சேரன் தான்.

காரணம் சில விஷயங்களை சிலர் சொன்னால்தான் அது சேர வேண்டிய இடத்திற்கு சரியாகச் சென்று சேரும். இந்தப் படத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு முக்கிய பிரச்சனையை மத்திம வயதில் உள்ள, அதே சமயம் மக்களுக்கு நன்கு அறிமுகமான சேரன் போன்ற ஒரு நடிகர் சொன்னால் மட்டுமே அது பொதுமக்களிடம் சரியான விதத்தில் சென்று சேரும் என உறுதியாக நம்பினோம்.

அந்த வகையில் இந்த படத்தில் சேரன் ஒரு தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எமோஷனல் த்ரில்லாராக உருவாகியுள்ள ‘ராஜாவுக்கு செக்’, இதுவரை தமிழ் சினிமாவில் வந்திராத ஒரு ஜானரை சேர்ந்த படம் என தைரியமாகச் சொல்வேன்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில்தான் சேரன் தனது ’திருமணம்’ படத்தையும் ஒரே மூச்சில் உருவாக்கிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் ‘ராஜாவுக்கு செக்’ படத்தில் சேரனுக்கு ஒரு கெட்டப் சேஞ்ச் மாற்ற வேண்டியிருந்தது. அதைக் கணக்கிட்டு, அவர் ‘திருமணம்’ படத்தில் நடித்து முடித்துவிட்டு வந்ததும், அவரது கெட்டப்பினை மாற்றி அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினோம்.

தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவு பெற்று இன்னும் சில நாட்களில் முதல் காப்பி கைக்கு வந்துவிடும். சென்சார் சான்றிதழ் மற்றும் தயாரிப்பாளர் சங்க தேதி ஒதுக்கீடு ஆகிய விஷயங்களுக்குப் பிறகு படத்தின் ரிலீஸ் தேதி குறித்து முறையாக அறிவிக்கப்படும்,” என்கிறார் இயக்குநர் ராஜ்குமார்

‘ராஜாவுக்கு செக்’ வைக்கும் ராணிகளாக மலையாள திரையுலகைச் சேர்ந்த சரயூ மோகன், நந்தனா வர்மா மற்றும் முக்கிய வேடத்தில் சிருஷ்டி டாங்கே என மூன்று பேர் நடித்துள்ளனர். ‘சுண்டாட்டம், பட்டாளம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள விஜய் டிவி புகழ் இர்பான் வில்லனாக நடித்திருக்கிறார்.

மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட் மற்றும் தாமஸ் கொக்காட் ஆகியோர் இந்த படத்தை பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கின்றனர்.

இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் எம்எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். ‘குற்றம் கடிதல்’ படத்தின் எடிட்டிங்கிற்காக பேசப்பட்ட பிரேம் இந்த படத்தின் படத்தொகுப்பைக் கவனிக்கிறார்.

தெலுங்கில் பிரபலமாக உள்ள வினோத் யஜமானியா இப்படத்தின் இப் படத்தின் மூலம் தமிழுக்கு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்

எமோஷனல் த்ரில்லர் என்றாலும் படத்தில் தேவையான அளவுக்கு ஆக்சன் காட்சிகளும் உண்டு. ஆக்சன் காட்சிகளை டேஞ்சர் மணி வடிவமைத்துள்ளார். ஒட்டுமொத்த படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

37 சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்ற ‘ஒற்றைப் பனை மரம்’

Read Next

திருமணம் – ஆல் தி பெஸ்ட்….பாடல் வீடியோ

Most Popular