பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் வழங்கும் எழில் மாறன் புரொடக்ஷன்ஸ், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இதில் நாயகன் விஷ்ணு விஷால், நாயகி நிக்கி கல்ராணி , இயக்குநர் எழில், நடிகர்கள் சூரி, ரவி மரியா, இசையமைப்பாளர் C. சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குநர் எழில் பேசியதாவது, “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படம் எனக்கும், நாயகன் விஷ்ணு விஷாலுக்கும், இசையமைப்பாளர் சத்யாவிற்கும் 10வது திரைப்படம்.
நான் இப்படத்தின் கதையை நாயகன் விஷ்ணு விஷாலிடம் கூறியதும், கதை பிடித்த காரணத்தால் தானே தயாரிப்பதாக முன் வந்து கூறினார். அவருடைய தயாரிப்பு ஐடியாக்கள் மிகவும் புதிதாக இருந்தது. விஷ்ணு விஷாலின் தனிச்சிறப்பு அவருடைய ப்ரோமோஷன் ஐடியாக்கள் தான். இன்றைய காலகட்டத்தில் படத்தை தயாரிப்பதை விட அதை விளம்பரபடுத்துவது தான் கடினமான ஒன்று.
நிக்கி கல்ராணிக்கு இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம், டத்தில் அவர் பெண் போலீசாக நடித்து சண்டை காட்சிகளில் நடித்து கலக்கியுள்ளார்,” என்றார்.
விழாவில் நடிகர் ரவி மரியா பேசும் போது, “படத்திற்கு ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ என்று பெயர் வைத்ததற்கு பதிலாக ‘இறங்கி அடிச்சா எப்படி இருக்கும்’ என்று தலைப்பு வைத்திருக்கலாம். ஏன் என்றால் படத்தில் அனைவரும் அவ்வளவு தூரம் இறங்கி அடித்துள்ளனர்.
நான் இயக்குநராக பெரிய அளவில் மின்னவில்லை என்றாலும் நடிகனாக சாதிக்க வேண்டும் என்று வெறியோடு இருக்கிறேன். அதனால் தான் தேர்ந்தெடுத்து ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறேன். எப்போதும் இயக்குநர் எழில் எனக்கு மிக சிறந்த கதாபாத்திரங்களையே கொடுத்து வருகிறார். இப்படத்திலும் அது தொடர்கிறது,” என்றார்.
விழாவில் இசையமைப்பாளர் சத்யா பேசியதாவது, “நான் முதன் முறையாக இப்படத்தில் இயக்குநர் எழிலுடன் இணைகிறேன். நான் எப்போதும் ஒரு படத்திற்கு பின்னணி இசையமைக்கும் போது , முழு படத்தையும் பார்த்துவிட்டு இசையமைக்க மாட்டேன். ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு பகுதியாக பார்த்து இசையமைப்பேன். ஆனால் இந்த படத்தை முழுவதும் பார்த்துவிட்டு தான் இசையமைத்தேன். காரணம் படத்தில் சூரியின் காமெடி பெரிதும் என்னை கவர்ந்தது,” என்றார்.
நாயகன் விஷ்ணு விஷால் பேசும் போது, “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ திரைப்படம் எனக்கு மட்டும் தான் பத்தாவது திரைப்படம் என்று நினைத்தேன். ஆனால் நான் இதை பற்றி எழில் சாரிடம் கூறும் நேரத்தில் தான் அவருக்கும் இது பத்தாவது படம் என்று தெரியவந்தது. அதன் பின் இசை வெளியீட்டு நேரத்தில் தான் இசையமைப்பாளர் C.சத்யாவிற்கும் இது பத்தாவது படம் என்று தெரியவந்தது.
‘நீர் பறவை’ படத்திற்குப் பின் நான் படங்களை தேர்வு செய்து தான் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதே போல் இதுவரை எல்லா படங்களையும் தேர்வு செய்து தான் நடித்து வருகிறேன். இதுவும் நான் யோசித்து தேர்வு செய்து நடிக்கும் கதைதான். படத்தில் ஒரு பாடலுக்கு கலர் கலரான உடைகளை எனக்கு படத்தின் உடை வடிவமைப்பாளர் ஜாய் அளித்தார். இது போன்ற ஆடைகளை இப்படத்தில் தான் அணிகிறேன். முதலில் யோசித்த எனக்கு இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு கமர்ஷியல் படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று அதன் பின்தான் எனக்குப் புரிந்தது,” என்றார்.
‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ ஜுன் 3ம் தேதி வெளியாகிறது.