‘திருநாள்’ வெற்றியின் மகிழ்ச்சியில் ஜீவா

கோதண்டபாணி பிலிம்ஸ் சார்பில் எம்.செந்தில்குமார் தயாரிப்பில், ஜீவா, நயன்தாரா நடிப்பில் பி.எஸ்.ராம்நாத் இயக்கத்தில் உருவான ‘திருநாள்’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதை முன்னிட்டு படத்தின் வெற்றிக்கான மகிழ்ச்சி சந்திப்பு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ‘திருநாள்’ படத்தின் நாயகன் நடிகர் ஜீவா பேசும்போது

”இன்று ‘திருநாள்’ படம்வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது என் வாழ்க்கையில் முக்கியமான படம். நான் ‘யான்’ படத்தில் நடித்துக் கொண்டு இருக்கும் போது ராம்நாத் இந்தக் கதையை என்னிடம் கூறினார். இது உங்களுக்காக தைக்கப்பட்ட சட்டை போல ‘டெய்லர் மேட்’ படமாக இருக்கும் என்றார்.

முதல் பாதி கதையைக் கேட்டவுடனேயே பிடித்துவிட்டது. அப்போதே என் உள்ளுனர்வு சொன்னது இந்தப் படத்தில் நடிக்கலாம் என்று. எல்லாமே நல்லபடியாக அமைந்தது. நல்ல படக்குழு நல்ல உள்ளுணர்வோடு சந்தோஷமாகவே நடித்தேன். என் ஒவ்வொரு படத்தையும் நன்றாக வரவேண்டும் என்று நினைத்துதான் செய்கிறேன். உண்மையாக உழைக்க வேண்டும் என்று நினைத்துதான் செய்கிறோம். இந்தப் படத்திலும் அப்படித்தான் நினைத்து நடித்தேன்.

கும்பகோணத்தில் 45 நாட்களிலேயே முழுப்படத்தையும் இயக்குநர் முடித்துவிட்டார். டப்பிங்கில் பார்த்த போது வேண்டாத காட்சிகள் என்று எதுவும் இல்லை. அந்த அளவுக்கு எடிட்டிங் சென்சோடு படத்தை எடுத்திருந்தார்.

இயக்குநர் எடிட்டிங் சென்ஸ் உள்ளவர் மட்டுமல்ல மனித உணர்வுகளையும் புரிந்தவரும்கூட. ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமியின் ரசிகன் நான், இதில் அவர் நன்றாக ஒளிப்பதிவு செய்திருந்தார். இசையமைப்பாளர் ஸ்ரீயுடன் ‘ஈ’ ,’தெனாவெட்டு’ க்குப்பிறகு எனக்கு இது மூன்றாவது படம். இனிமையான பாடல்களைக் கொடுத்திருந்தார். வீட்டில், மனைவி, அம்மா எல்லாருக்கும் பிடித்த பாடல்கள்.நல்ல படத்துக்கு, நல்ல படக்குழுவுக்கு எல்லாம் தானாக அமையும் என்பேன். அப்படி அமைந்த படம் இது. பாபி மாஸ்டருடன்’தெனாவெட்டு’ க்குப்பிறகு இதில் சேர்ந்து பணியாற்றினேன்.

படம் பார்த்துவிட்டு கும்பகோணம், திருச்சி, கோயம்புத்தூரிலிருந்து எல்லாம் நிறையபேர் போன் செய்தார்கள். எல்லாருக்கும் இதில் என் தோற்றம் பிடித்தது. இப்படி ஊர்ப்பகுதி மக்களுக்குப் பிடித்த படமாகவும் அமைந்தது மகிழ்ச்சி. நயன்தாராவுடன் நடித்தது எல்லாருக்கும் பிடித்து இருந்தது. பொருத்தமான ஜோடி என்கிறார்கள். நயன்தாராவுடன் நடித்த போது நயன் இயர்ஸுக்குபிறகு நயனுடன் நடிப்பதாக அவருடன் கலாய்ப்பேன். அவர் தொழிலில் சரியாக இருப்பவர்.

தயாரிப்பாளர் செந்தில் குமார் சூப்பர் குட் பிலிம்ஸ் கம்பெனியில் ஒரு தூண் போன்றவர். அவர் தயாரிப்பில் ‘திருநாளு’க்குப் பிறகு அடுத்து ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படத்தில் நடிக்க இருக்கிறேன். இந்த வெற்றி எதிர்காலத்தில் தரமான நல்ல படங்கள் தரவேண்டிய ஊக்கத்தைக் கொடுத்திருக்கிறது ”என்றார்.
நிகழ்ச்சியில் இயக்குனர் பி.எஸ்.ராம்நாத், இசையமைப்பாளர் ஸ்ரீ, ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி, நடன இயக்குநர் பாபி, பாடலாசிரியர் ஜீவன் மயில், ஜீவாவின் அடுத்த படமான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ இயக்கவுள்ள இயக்குநர் ஜே.எம். அருண் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

Read Previous

இது சாகும் வயதல்ல, சாதிக்கும் வயது – வைரமுத்து இரங்கல்

Read Next

7 Naatkal – First Motion Poster

Most Popular