தனி இசைப் பாடல்கள் மூலம் இசை உலகில் அறிமுகமானபர் ‘ஹிப் ஹாப் தமிழா’ என அழைக்கப்படும் ஆதி.
‘ஆம்பள’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து “இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி” ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தற்போது ‘தமிழன் என்று சொல், கத்திச் சண்டை, துருவா (தெலுங்கு), கேவி.ஆனந்த் – விஜய் சேதுபதி படம் ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
அதோடு ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் இயக்குனராகவும், ஹீரோவாகவும் அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தை அவ்னி மூவீஸ் சார்பில் இயக்குனர் சுந்தர்.சி தயாரிக்கிறார்.
“தனி இசைப் பாடல்கள் மூலம் என்னுடைய இசை வாழ்க்கை ஆரம்பமானது. ‘ஆம்பள’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான போதே என்னை ஹீரோவாகவும் அறிமுகப்படுத்துவேன் என்று அறிவித்தவர் இயக்குனர் சுந்தர் .சி சார்.
‘ஜல்லிக்கட்டு’ பாடலை உருவாக்கிய பின் படம் இயக்கி நடிக்கத் தயாரானேன். அதை சுந்தர் சாரிடம் சொன்ன போது உடனே ஆரம்பித்துவிடு என்றார். அப்படி ஆரம்பமான படம் இப்போது முடிவுடையும் நிலைக்கு வந்துள்ளது.
கல்லூரியை மையப்படுத்திய கதை. என்னுடன் இருந்தவர்களையே இந்தப் படத்திலும் சேர்த்துக் கொண்டுள்ளேன். காதல், கலகலப்பு என அனைவரும் ரசிக்கும்படியான படமாக இருக்கும்,” என்கிறார் ஹிப்ஹாப் தமிழா.
இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.