நயன்தாரா போல் பெரிய நடிகை ஆக வேண்டும் – நடிகை ஹர்ஷிகா பேச்சு
மலையாளத்தில் மிகவும் பிரபலமான நிறுவனமான மரிகர் ஆர்ட்ஸ் நிறுவனம் தமிழில் முதன் முறையாக படம் தயாரிக்க களம் இறங்கியுள்ளது.
பெயரிடப்படாத இப்படத்தை அறிமுக இயக்குநரான ஹாஷிம் மரிகர் இயக்குகிறார்.
மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மம்மூட்டியின் தம்பி மகனான மக்பூல் சல்மான் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். மக்பூல் சல்மான் மலையாளத்தில் பல்வேறு படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஹிந்தியில் சர்ச்சை மற்றும் பரபரப்பை கிளப்பிய ‘ஹேட் ஸ்டோரி’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த பவுளி டாம் இப்படத்தில் நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். கன்னடத்தில் 12 படங்களுக்கு மேல் நடித்த பிரபலமான நடிகையான ஹர்ஷிகா பூனச்சா மற்றும் சாக்ஷி திவேதி ஆகியோர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தமிழ், மலையாளத்தில் பல படங்களில் நடித்த நடிகரான ரியாஸ் கான இப்படத்தில் கல்லூரி மாணவராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
படத்துக்கு ஒளிப்பதிவு சஜித் மேனன் , இசை மன்சூர் அஹ்மத் , படத்தொகுப்பு பிரவீன் KL , கலை அர்கன் , தயாரிப்பு நிறுவனம் மரிகர் ஆர்ட்ஸ் , தயாரிப்பாளர்கள் சுஹாளி சாய்க் மாதர் , ஷாஜி ஆலப்பட்.
இப்படத்தின் அறிமுக விழா சமீபத்தில் நடைபெற்றது.
விழாவில் நாயகன் மக்பூல் சல்மான் பேசியதாவது ,
“தமிழில் நாயகனாக அறிமுகமாவது மகிழ்ச்சியாக உள்ளது. மிகச் சிறப்பான கதையில் இந்த படக்குழுவுடன் பணியாற்றுவது புதிய அனுபவமாக உள்ளது. இப்படத்தில் என்னோடு நடிக்கும் அனைத்து நாயகிகளும் சிறந்த நடிகைகள்.
ரியாஸ் கான் அண்ணன் என்னோடு கல்லூரி மாணவராக நடிக்கிறார். என்னுடைய பெரியப்பா மம்மூட்டி மாபெரும் நடிகர். மலையாளம், தமிழ் என அனைவரும் அறிந்த மாபெரும் பிரபலம். என்னுடைய அண்ணன் துல்கர் சல்மானும் தற்போது மலையாளம் மற்றும் தமிழில் முன்னணியில் இருக்கிறார். என்னுடைய பெரியப்பா மம்மூட்டிக்கும் , அண்ணன் துல்கர் சல்மானுக்கும் அளித்த ஆதரவை , பாசத்தை எனக்கும் அளிக்க வேண்டும்,” என்றார்.
விழாவில் நாயகி ஹர்ஷிகா பூனச்சா பேசியதாவது,
“மிகச் சிறந்த இந்த குழுவுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு தமிழில் நடிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய கனவு. தமிழ்த் திரைப்படங்களில் நடித்து நல்ல இடத்தை பிடித்து நயன்தாரா போல் பெரிய நடிகையாக வரவேண்டும் என்பது என்னுடைய ஆசை. இப்படத்தின் தயாரிப்பாளர்கள் இப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்கள். நிச்சயம் இப்படம் சிறப்பான ஒன்றாக அமையும்,” என்றார்.