தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி ஜெயலலிதாவின் வாழ்க்கையை ‘சசி லலிதா’ என்ற படமாக எடுக்க உள்ளார்.
இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான இவர், ‘ஜெயம் மூவிஸ்’ என்ற பெயரில் பல படங்கள் தயாரித்திருக்கிறார். அனைத்து இந்திய மொழிகளிலும் படங்கள் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.
தற்போது அவர் தயாரித்து இயக்கப் போகும் படத்தின் பெயர் ‘சசி லலிதா’. ஜெயலலிதா மீது கொண்ட அன்பினால் அவரின் வாழ்க்கையை படமாக எடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த அத்தனை சம்பவங்களும் இப்படத்தில் இருக்கும். இக்கதையை ஜெயலலிதாவின் ஆத்மா கூறியதன் அடிப்படையில்தான் படம் இருக்குமாம்.
சிறு வயதில் எப்படி இருந்தார் ?, எப்படி நடிகையாக ஆனார் ?, அரசியலில் அடியெடுத்து வைத்தது, அதிமுகவில் அவரது பங்களிப்பு, சசிகலாவின் வாழ்க்கை, அவருடன் ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட தொடர்பு என்று மக்கள் அறியாத பல விஷயங்களையும் உள்ளடக்கி கதையாக இப்படம் இருக்கும் என்கிறார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு ஜெயலலிதாவின் வாழ்க்கை பற்றி அறிந்து கொள்ள ஆவல் இருக்கும். அதை நிறைவேற்றும்விதமாக இப்படத்தை உருவாக்க இருக்கிறார்களாம்.
“ஜெயலலிதாவின் இறுதி 75 நாட்கள் மருத்துவமனையில் என்ன நடந்தது ? என்பது பற்றியும், உச்சநீதி மன்றத்தில் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்பது தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்திருப்பதும், அது பற்றிய முழு விபரத்தையும் உலகிற்கு தெரியப்படுத்தும் விதமாகவும் இப்படம் இருக்கும். சிறுவயது முதல் ஜெயலலிதாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர்களும், ஜெயலலிதாவின் ஆத்மாவும் கூறியது தான் இப்படம். ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களைக் கொண்டிருப்பதால் நிச்சயம் இப்படம் எல்லோர் இதயத்திலும் நீங்காத இடம்பெறும்,” என இயக்குனரும் தயாரிப்பாளருமான ஜெகதீஸ்வர ரெட்டி கூறினார்.