இறைவன் சினி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக C.செல்வகுமார் தயாரிக்கும் படம் ‘ஒரு கனவு போல’.
வி.சி. விஜயசங்கர் இயக்கத்தில் ராம் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் ராமகிருஷ்ணன், சௌந்தர்ராஜா இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். நாயகியாக புதுமுகம் அமலா நடிக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. படத்தின் பாடல்களை முதன் முறையாக பென்டிரைவில் வெளிட்டுள்ளனர்.
விழாவில் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், நடிகர்கள் சார்லி, அசோக், இயக்குனர்கள் பேரரசு, எஸ்.ஆர்.பிரபாகரன், பொன்ராம், கார்த்திக் சுப்புராஜ், நடிகை ரோகிணி, பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, பெப்ஸி சண்முகம், கவிஞர் முத்துலிங்கம், ஒளிப்பதிவாளர் சுகுமார் மற்றும் ‘ஒரு கனவு போல’ படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய நடிகர் விஷால்,
“நான் இப்போது நடிகனாகவோ நடிகர் சங்க செயலாளராகவோ பேசவில்லை. ஒரு மனிதனாகப் பேசுகிறேன். காப்பாற்ற வேண்டிய விவசாயிகள் அழிந்து கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு விவசாயியையும் காப்பாற்ற வேண்டும். அதற்காக நாங்கள் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் பெப்ஸி மற்றும் அனைத்து சங்கங்களும் இறங்க இருக்கிறோம். அதற்கான அறிவிப்பு விரைவில் வரும். அது சம்மந்தமாக இப்போதுதான் பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் பேசினேன்.
நான் இந்த விழாவிற்கு நடிகர் சௌந்தர்ராஜாவும், ராமகிருஷ்ணனும் அழைத்ததால் தான் வந்தேன். ஆனால் பொதுவாக நான் இசை வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்ள மாட்டேன். இந்த விழாவிற்குத் தான் வந்திருக்கிறேன். இப்போது ஆரியா, ஜெயம் ரவி, கார்த்தி, ஜீவா எல்லோரும் எங்கள் பட விழாக்களில் கலந்து கொள்ள வரவில்லை என்று நிச்சயமாக கலாட்டா செய்வார்கள். அதனால் இனி அவர்கள் விழாக்களிலும் கலந்து கொள்ள வேண்டும்.
சின்ன படம் பெரிய படம் என்று எதுவும் இல்லை. தற்போது சிறிய பட்ஜெட் படங்கள் நிறைய வெற்றி அடைகின்றன. என் படம் வெற்றியடைந்தால் விஷால் மட்டும் தான் பேசப்படுவான். ஆனால், ‘ஒரு கனவு போல’ மாதிரியான படங்கள் வெற்றி பெற்றால் தான் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வெற்றி கிடைக்கும்.
விழாவில் கலந்து கொண்டதற்கு விஷாலுக்கு பரிசு ஒன்றைத் தருவதாக சௌந்தர்ராஜா கூறினார், ஆனால் விஷால் அவருக்கு அப்படி எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.
அதனால் படத்தின் தயாரிப்பாளர் சி.செல்வகுமாரும், நடிகர் சவுந்தர்ராஜாவும், “நீங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக எடுக்கும் முயற்சிக்கு உதவ முதல் நன்கொடையாக நாங்கள் இதைத் தருகிறோம், என்று 25,000 ரூபாயை நன்கொடையாக கொடுத்தனர்”.