“சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல்” படங்களுக்குப் பிறகு எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கி அடுத்து வரவிருக்கும் ‘சத்ரியன்’ படத்துக்கும் சென்சார் போர்டு ‘யு’ சான்றிதழ் வழங்கி இருக்கிறது .
இதுபற்றி எஸ்.ஆர்.பிரபாகரன் கூறும்போது
‘‘இன்றைய சூழலில் ரசிகர்கள் குடும்பத்துடன் பார்க்கும் படங்கள்தான் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் தரும் என்ற நிலை இருக்கிறது. இயல்பாகவே நான் உறவினர்களோடு சினிமா பார்க்கும் குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதால் ஒரு குடும்பப் படத்தில் என்னவெல்லாம் எதிர்பார்ப்பார்கள் என்பது தெளிவாகத் தெரியும். அதனால் தான் என்னுடைய முந்தைய இரண்டு படங்களுமே குடும்பங்களை கொண்டாட வைத்தது.
ஆனால், ‘சத்ரியன்’ படம் முந்தைய இரு படங்கள் போன்றது அல்ல. பதிலாக கதையே ரவுடியிஸம், கேங்க்ஸ்டர் என்ற அடிப்படையில் அமைந்தது. எனவே எனது ஆஸ்தான குடும்ப ரசிகர்களுக்காக திரைக்கதையில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது.
படம் பார்த்து முடித்த சென்சார் அதிகாரிகள் இந்த ஆண்டு நாங்கள் பார்த்ததிலேயே ஒரு முழுமையான படம் இது என்று பாராட்டியதோடு, ஒரு நூலிழை மிஸ் ஆகியிருந்தாலும் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் தர வேண்டியதாக ஆகியிருக்கும்.
அப்படி ஏற்படாத அளவுக்கு நீங்கள் காட்சியமைப்பில் உழைத்திருந்தது ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிந்தது என்று மனமாரப் பாராட்டினார்கள்.
என் படைப்புக்கு கிடைத்த சின்ன அங்கீகாரமாக அவர்கள் அளித்த ‘யு’ சான்றிதழையும் பாராட்டையும் ஏற்று அதை அப்படியே ரசிகர்களுக்கு கொண்டு வந்து சேர்க்கக் காத்திருக்கிறேன்,” என்றார்.
‘சத்ரியன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.