‘ராஜா ராணி, தெறி’ படங்களுக்குப் பிறகு விஜய் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வரும் அட்லீ பத்திரிகையாளர்களை இன்று சந்தித்தார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது,
“உதவி இயக்குனராக இருந்த எனக்கு முதல் பட வாய்ப்பை அளித்த ஏ.ஆர்.முருகதாஸ் மாதிரி, தன் உதவியாளர்களுக்கு முதல் வாய்ப்பை கொடுத்து வளர்த்து விடும் என் குருநாதர் ஷங்கர் மாதிரி நான் வளர்ந்த சினிமாவுக்கு நானும் ஒரு பங்காக இருந்து நல்ல கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட பட நிறுவனம் தான் ‘ஏ ஃபார் ஆப்பிள்’.
முதல் படத்தில் கமல்ஹாசனின் உதவியாளரான என் நண்பன் ‘ஐக்’கை ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தின் கதையைக் கேட்டு அறிமுகப்படுத்துகிறேன். ஐக் எம்.ஆர்.ராதவின் பேரன், ரொம்ப திறமைசாலி. எனக்கு பேய்னாலே ரொம்ப பயம், அவர் பேய் கதையை வந்து சொன்ன உடனே தயாரிக்க முடிவெடுத்து விட்டேன்.
தொடர்ந்து என் நண்பன், என்னுடன் 10 ஆண்டுகளாக பயணித்து வரும் சூர்யா பாலகுமாரன் இயக்கும் படத்தை எனது இரண்டாவது தயாரிப்பாகவும், என் டீமில் சிறந்த திரைக்கதையாளனாக இருக்கும் அசோக் இயக்கும் படத்தை மூன்றாவது தயாரிப்பாகவும் தயாரிக்க இருக்கிறேன். இந்த இரண்டு படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் மாதம் நடக்கும். நான் இயக்கும் தளபதி 61 நன்றாக போய்க் கொண்டிருக்கிறது,” என்றார் அட்லீ.
தன்னுடைய மூன்றாவது படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போதே மூன்று படங்களைத் தயாரித்து மூன்று இயக்குனர்களை அறிமுகப்படுத்துகிறார் அட்லீ.