பசங்க புரொடக்சன்ஸ் பாண்டிராஜ் மற்றும் லிங்க பைரவி கிரியேஷன்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார், அர்த்தனா நடிப்பில் அறிமுக இயக்குநர் வள்ளிகாந்த் இயக்கியுள்ள படம் ‘செம’.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்த்திபன் பேசியதாவது,
“ஜி.வி என்றால் கேர்ள்ஸ் வியூ பெண்களின் பார்வை ஜிவி பிரகாஷ் மீது பிரகாசமாக வீசுகிறது. சம்சாரிக்கும், சன்யாசிக்கும் வித்தியாசம் என்னவென்றால் சன்யாசி புலித்தோல் மீது தூங்குவான், சம்சாரி புலியுடனே தூங்குபவன். அப்படி புலியுடன் தூங்குபவன் தான் ஜி.வி.பிரகாஷ். நாயகி ஜி.வி.யை பற்றி பேசும்போது அவரது மனைவியின் பார்வை அப்படித் தான் இருந்தது. கமர்ஷியல் படம் எடுப்பதே கஷ்டம், அதிலும் முதல் படமே கமர்ஷியல் படமாகக் கொடுப்பது ரொம்பப் பெரிய விஷயம். அவர்களின் உழைப்புக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்,” என்றார் பார்த்திபன்.
தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஞானவேல் ராஜா பேசும் போது,
“வாரத்துக்கு 3 படங்கள் ரிலீஸ் செய்தால் 150 படங்கள் தான் ரிலீஸ் செய்ய முடியும், ஆனால் இங்கு 200க்கும் மேற்பட்ட படங்கள் ஆண்டுக்கு தயாராகின்றன. படங்கள் உருவாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது வாரத்துக்கு 3 படங்களுக்கு மேல் ரிலீஸ் செய்தாக வேண்டும். கேபிள் டிவி ஒளிபரப்பையும், படங்களின் ரிலீஸ் தேதிகளை ஒழுங்குபடுத்தும் வேலைகளை தயாரிப்பாளர் சங்கம் செய்து வருகிறது,” என்றார்.
தயாரிப்பாளர் பாண்டிராஜ் பேசுகையில்,
“வள்ளிகாந்த் எந்த ஒரு விஷயத்தையும் முகத்துக்கு நேரே சொல்லுபவன், அது தான் அவனை என் உதவியாளராக நான் சேர்த்துக் கொள்ள முக்கிய காரணம். என்னிடம் நிறைய திட்டு வாங்கிய உதவி இயக்குனரும் அவன் தான். அவனுக்கு என்ன செய்வது என யோசித்து தான் இந்தப் படத்தை தயாரித்தேன். ஒரு படம் எடுப்பதே ரொம்ப கஷ்டமான விஷயம். ஒரே நேரத்தில் ஜிவி 12 படம் நடிப்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. ஜிவியுடன் கூடிய விரைவில் ஒரு படத்தில் இணைவேன்,” என்றார் இயக்குனர் பாண்டிராஜ்.
படத்தின் நாயகி அர்த்தனா பினு, மைம் கோபி, ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம், தயாரிப்பாளர்கள் ரவிச்சந்திரன், தனஞ்செயன், ராஜசேகர் பாண்டியன், இயக்குனர்கள் வசந்தபாலன், பொன்ராம், பிரசாந்த் பாண்டிராஜ், ராமு செல்லப்பா, கார்த்திக் ராஜு, ஜெகன்நாத், ராமகிருஷ்ணன், வள்ளிகாந்த் ஆகியோரும் பேசினார்கள்.