7 சி என்டர்டெயின்மென்ட், அம்மா நாராயணா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஆறுமுக குமார் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நிஹரிகா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி 8 விதமான தோற்றங்களில் நடித்து வருகிறார். அது பற்றி படத்தின் இயக்குனர் ஆறுமுக குமார் கூறுகையில்,
“இது ஓர் அட்வெஞ்சர் காமெடி படமாகும். இப்படத்தில் ஒரு சுவாரசியமான பழங்குடி இன தலைவராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்காக 8 வெவ்வேறு தோற்றங்களில் நடிக்கிறார். இவரது நடிப்புத் திறனையும், அர்ப்பணிப்பையும் கண்டு ஆச்சரியமடைந்தேன்.
படத்தின் இயக்குனராக மட்டுமின்றி அவரது தீவிர ரசிகராகவும் இப்படத்தில் அவரது நடிப்பை மிகவும் ரசித்தேன். அவருடைய கதாபாத்திரம் மிக மிக மிக சுவாரசியமானது மட்டுமின்றி மிகவும் சவாலானது கூட. இந்த சவாலை அவர் மிக சுலபமாகவும் புத்திசாலித்தனமாகவும் கையாண்டதைக் கண்டு ஆச்சிரியப்பட்டு வியந்தேன்.
‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ மிகச் சிறப்பாக வந்துள்ளது . படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது . விஜய் சேதுபதியின் 8 வெவ்வேறு தோற்றங்களும் அவரது ரசிகர்களை மட்டுமின்றி அனைவரையும் கவரும்.
இப்படத்தின் இன்னொரு கதாநாயகனான கௌவுதம் கார்த்திக் சமீபத்தில் சுவைத்த தரமான வெற்றி எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் மேலும் பல உயரங்களைத் தொடுவார். தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையை மனதில் வைத்துதான் படத்தை எடுத்திருக்கிறோம்,” என்கிறார் ஆறுமுக குமார்.