மோகிதா சினி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் எம்.சுப்பிரமணியன், தயாரிக்கும் படம் ‘மாணிக்’.
‘நாளைய இயக்குநர்’ சீசன் 5- ன் வெற்றியாளர் மார்டின் இயக்கும் இப்படத்தில் மா.கா.பா.ஆனந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக சூஷா குமார் நடிக்கிறார். இரண்டாவது ஹீரோவாக வத்சன் நடிக்க, அருள்தாஸ், ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியில் கலந்துக்கொண்ட அணு, புஜ்ஜி பாபு, கோலிசோடா சீதா, ஜாங்கிரி மதுமிதா, சிவசங்கர், மனோபாலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குநர் மார்டின் கூறுகையில்,
“ஆசிரமத்தில் வளர்ந்த ஹீரோ மாகாபா. ஆனந்த் மற்றும் இரண்டாவது ஹீரோ வத்சன் இருவரும் ஒரு விஷயத்தில் பெரிய அளவில் சாதிக்க ஆசிரமத்தில் இருந்து கிளம்புகிறார்கள், அப்படி அவர்கள் சாதிக்க நினைத்தது என்ன, அந்த சாதனை முயற்சியில் அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் என்ன, இறுதியில் நினைத்ததை சாதித்தார்களா இல்லையா என்பதை ஃபேண்டசியாக சொல்லியிருக்கிறோம். அவர்களின் சாதனைப் பயணம் எந்த விஷயத்திற்காக என்பதுதான் படத்தின் சஸ்பென்ஸ்,” என்றார்.
தரன்குமார் இசையமைப்பில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்களும் வித்தியாசமான வார்த்தைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. “உச்சா…பசங்க…”, ” மாமா மர்கையா…”, “அடப் பாவி…” என்று தொடங்கும் இந்த மூன்று பாடல்களையும் இளைஞர்கள் முணுமுணுக்கும் வகையில் மிர்ச்சி விஜய் எழுதியுள்ளார்.
எம்.ஆர்.பழனிகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கே.எம்.ரியாஸ் படத்தொகுப்பு செய்கிறார். கலையை வினோத் நிர்மாணிக்க, ஆடை வடிவமைப்பை செந்தில்குமார் கவனிக்கிறார். ரஞ்சித், கே.ஆர்.பழனியப்பன், ஜெகன் நாதன் ஆகியோர் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்க, பி.ஆர்.ஒ பணியை சுரேஷ் சுகு கவனிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.
காமெடி கலந்த பேண்டசி படமாக உருவாகும் ‘மாணிக்’ படத்தின் முதல் பார்வை, டீசர் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. அதைத் தொடர்ந்து பாடல்கள் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ள தயாரிப்பு தரப்பு, படத்தை செப்டம்பர் மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் வெளியிட முடிவு செய்துள்ளது.